20 லட்சம் துப்பாக்கி, கூடவே சுற்றிய 50 பேர்.. கண்மூடி திறப்பதற்குள் நடந்த ஆம்ஸ்ட்ராங் கொலையின் முழு பின்னணி

Armstrong: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சில தினங்களுக்கு முன்பு சென்னை பெரம்பூர் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். சுமார் எட்டு பேர் கொண்ட கும்பலின் இந்த கொடூர செயல் தற்போது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலைக்கு காரணமான ஆற்காடு சுரேஷின் தம்பி உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்thurவிசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது எப்படி இதன் பின்னணி என்ன என்பது பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக தான் ஆம்ஸ்டராங் கொல்லப்பட்டுள்ளார். ஏற்கனவே தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நன்றாக தெரிந்து வைத்திருந்த ஆம்ஸ்ட்ராங் எப்போதும் குறைந்தபட்சம் 50 ஆதரவாளர்களை உடன் வைத்திருப்பாராம்.

அது மட்டும் இன்றி இவரிடம் அகில இந்திய உரிமம் பெற்ற அதிநவீன கைத் துப்பாக்கியும் இருந்திருக்கிறது. அதன் விலை மட்டுமே 20 லட்சம் ஆகும். இதை அவர் எப்போது வெளியில் சென்றாலும் உடன் வைத்திருப்பாராம்.

வீட்டில் இருக்கும் நேரத்தில் மட்டும் இந்த துப்பாக்கி அவரிடம் இருக்காது. இதை பல நாட்களாக நோட்டம் விட்டு தெரிந்து கொண்ட கொலை கும்பல் கழுகு போல் காத்திருந்து காரியத்தை சாதித்திருக்கின்றனர்.

காத்திருந்து கொலை செய்த கும்பல்

அதாவது ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு அருகில் பிரபல பிரியாணி கடை இருக்கிறது. அதில் எப்போதும் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் இருப்பார்களாம். அதை கவனித்த கொலை கும்பல் அதேபோன்ற சீருடையை அணிந்து வந்து ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளனர்.

சம்பவத்தன்று அவர் தன்னுடைய ஆதரவாளர்கள் இரண்டு பேருடன் வீட்டுக்கு வெளியில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கண் மூடி திறப்பதற்குள் நடந்த இந்த கொலை குறித்து ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.

அந்த சமயத்தில் இவர் அருகில் உள்ள கோவிலில் இருந்திருக்கிறார். திடீரென சத்தம் கேட்டதால் ஓடி வந்திருக்கிறார். அப்போது ஆம்ஸ்ட்ராங்கை தாக்கிக் கொண்டிருந்த கும்பல் இவரையும் தாக்க வந்துள்ளனர். அதில் இவருக்கு முதுகு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

சில நிமிடங்களுக்குள் நடந்து முடிந்து விட்ட இந்த சம்பவத்தில் கொலைகாரர்களின் முகத்தை தான் பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் தம்பியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன். அதனால் என்னை தாக்கியது யார் என்று கூட நினைவில்லை என அவர் கூறியுள்ளார்.

தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தமிழகத்தில் பதற்றத்தையும் அரசியல் வட்டாரத்தில் அதிர்வையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வரும் நிலையில் விரைவில் முழு விவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்திய ஆம்ஸ்ட்ராங் படுகொலை

Next Story

- Advertisement -