1. Home
  2. சினிமா செய்திகள்

விலகிய ஜனநாயகன்.. பராசக்திக்கு போட்டியாக வரும் படம்

parasakthi

ஜனவரி 9ம் தேதி வெளியாகவிருந்த தளபதி விஜய்யின் ஜனநாயகன் படம் தணிக்கை சிக்கல்கள் காரணமாக ரிலீஸ் தேதியை ஒத்திவைத்துள்ளது.


தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த விஜய்யின் ஜனநாயகன் படம், திட்டமிட்டபடி ஜனவரி 9-ம் தேதி வெளியாகாது என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இன்னும் சென்சார் போர்டு எனப்படும் தணிக்கை குழுவிடமிருந்து சான்றிதழ் கிடைக்காததே இந்த தாமதத்திற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.

பொதுவாக ஒரு பெரிய படம் வெளியாவதற்கு குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பே தணிக்கை நடைமுறைகள் முடிவடைவது வழக்கம். ஆனால், இப்படத்தில் உள்ள சில அரசியல் வசனங்கள் அல்லது காட்சிகள் காரணமாக தணிக்கை குழு தரப்பில் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.

தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் (KVN), நள்ளிரவில் மிகவும் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தவிர்க்க முடியாத தொழில்நுட்ப மற்றும் நிர்வாகக் காரணங்களால் படத்தை தள்ளிவைக்க நேரிட்டதாகத் தெரிவித்துள்ளது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பெரிய வசூலை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ரிலீஸ் தள்ளிப்போயிருப்பது விஜய் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படமும் இதே தணிக்கை சிக்கலில் சிக்கியுள்ளது. ஜனவரி 10ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால், இன்று வரை இப்படத்திற்கும் சென்சார் சான்றிதழ் கைக்கு வரவில்லை. இதனால் திட்டமிட்டபடி படம் வெளியாகுமா என்ற சந்தேகம் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இருப்பினும், தயாரிப்பாளர் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார். பெரிய அளவிலான கட் எதுவும் இருக்காது என்றும், இன்று மாலைக்குள் எப்படியும் சான்றிதழ் கிடைத்துவிடும் என்றும் அவர் கருதுகிறார். இதனால் ரிலீஸுக்கான விளம்பரப் பணிகளும், தியேட்டர் முன்பதிவு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒருவேளை இன்று சான்றிதழ் கிடைக்காவிட்டால், சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் இது ஏமாற்றமாக முடியலாம்.

பெரிய படங்களின் ரிலீஸ் தேதியில் குழப்பம் நிலவும் இந்தச் சூழலைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தயாராகிவிட்டது கார்த்தியின் 'வா வாத்தியார்' குழு. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள இத்திரைப்படம், கடந்த மாதமே வெளியாக வேண்டியிருந்தது. ஆனால், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் காரணமாக தள்ளிப்போனது.

தற்போது கிடைத்திருக்கும் லேட்டஸ்ட் தகவலின்படி, 'வா வாத்தியார்' திரைப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. மற்ற இரண்டு பெரிய படங்களுக்கு இன்னும் சான்றிதழ் கிடைக்காத நிலையில், அனைத்து சட்ட ரீதியான நடைமுறைகளையும் முடித்துவிட்டு 'வா வாத்தியார்' ரிலீஸிற்குத் தயாராக இருக்கிறது.

இதனால், பொங்கல் ரேஸில் தாராளமாக இந்தப் படத்தை இறக்கிவிடலாம் என தயாரிப்பு நிறுவனம் ஆலோசித்து வருகிறது. கார்த்தியுடன் இணைந்து கிரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம் ஒரு காமெடி ஆக்ஷன் என்டர்டெய்னராக இருக்கும் என்பதால், குடும்ப ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய பட்ஜெட் படங்கள் கடைசி நேரத்தில் பின்வாங்குவது திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் சீசனை நம்பி பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில், எந்தப் படம் வரும், எது வராது என்ற குழப்பம் நீடிக்கிறது.

'ஜனநாயகன்' விலகியதால் ஏற்படும் காலியான திரையரங்குகளை கார்த்தியின் 'வா வாத்தியார்' மற்றும் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' (உறுதியானால்) ஆக்கிரமிக்க வாய்ப்புள்ளது. மேலும், சிறிய பட்ஜெட் படங்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையலாம்.

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.