தனுஷ் படப்பிடிப்பில் நேர்ந்த துயரம்.. மௌனம் கலைத்த நடிகை பார்வதி!
மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனது எதார்த்தமான நடிப்பால் முத்திரை பதித்தவர் நடிகை பார்வதி திருவோத்து. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனுஷ் நடிப்பில் வெளியான 'மரியான்' படப்பிடிப்பின் போது தான் சந்தித்த மிக மோசமான மற்றும் சங்கடமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு பரத் பாலா இயக்கத்தில், தனுஷ் - பார்வதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'மரியான்'. ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தாலும், அந்தப் படத்தின் உருவாக்கத்தின் போது பார்வதி பெரும் போராட்டத்தையே சந்தித்துள்ளார்.
ஒரு குறிப்பிட்ட காதல் காட்சிக்காக பார்வதி தண்ணீரில் முழுவதுமாக நனைந்து நடிக்க வேண்டியிருந்தது. படப்பிடிப்பு தளம் ஒரு ஒதுக்குப்புறமான பகுதி என்பதால், அங்கு அடிப்படை வசதிகள் குறைவாக இருந்துள்ளன. காட்சி முடிந்த பிறகு ஈரமான உடைகளை மாற்றுவதற்கு அவரிடம் கூடுதல் உடைகள் இல்லை. மேலும், ஒரு பெண்ணாக தனது தேவைகளைக் கவனித்துக் கொள்ள அங்கு சரியான ஆட்கள் இல்லை என்பதுதான் பார்வதியின் ஆதங்கம்.
"அந்தச் சமயத்தில் எனக்கு மாதவிடாய் (Periods) காலம். ஈரமான உடையில் நீண்ட நேரம் இருப்பது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகுந்த சிரமத்தைத் தந்தது. உடை மாற்ற ஓட்டல் அறைக்குச் செல்ல அனுமதி கேட்டபோது, படக்குழு தரப்பில் முதலில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. வேறு வழியின்றி, எனக்கு 'பீரியட்ஸ்' என்பதை அங்கிருந்தவர்கள் முன் சத்தமாகச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது," என பார்வதி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மரியான் படப்பிடிப்பின் போது ஒட்டுமொத்தப் படக்குழுவிலும் பார்வதியையும் சேர்த்து மூன்றே மூன்று பெண்கள் மட்டுமே இருந்துள்ளனர். இதுவே அவருக்குப் பெரிய பாதுகாப்பற்ற உணர்வைத் தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமாத் துறையில் தற்போது 'ஹேமா கமிட்டி' அறிக்கை மலையாளத் திரையுலகையே உலுக்கி வரும் நிலையில், பார்வதியின் இந்த வெளிப்படையான பேச்சு தமிழ் சினிமாவிலும் படப்பிடிப்பு தளங்களில் பெண்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.
பார்வதி எப்போதும் சினிமாவில் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர். 'பூ' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், 'மரியான்', 'உத்தம வில்லன்', 'பெங்களூர் நாட்கள்' மற்றும் சமீபத்தில் வெளியான 'தங்கலான்' வரை தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
திறமையான நடிகையாக இருந்தாலும், படப்பிடிப்பு தளங்களில் நிலவும் ஆணாதிக்கப் போக்கு மற்றும் பெண்களின் உடல்நலச் சிக்கல்களைப் புரிந்துகொள்ளாத தன்மை குறித்து அவர் பேசியிருப்பது, வளர்ந்து வரும் இளம் நடிகைகளுக்கு ஒரு விழிப்புணர்வைக் கொடுத்துள்ளது.
