மலேசியாவில் கோலாகலம்.. ஜன நாயகன் விழாவில் திரளும் நட்சத்திர பட்டாளம்!
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறுகிறது. பிரபுதேவா, அனிருத் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இதில் பங்கேற்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின் உற்சாகக் குரலால் அதிர்ந்து கொண்டிருக்கிறது. நடிகர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நாளை கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற புக்கிட் ஜலில் (Bukit Jalil) மைதானத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்த விழாவிற்காக 'தளபதி திருவிழா' எனப் பெயரிடப்பட்ட சிறப்பு வாகனம் கோலாலம்பூர் வீதிகளில் வலம் வருவது அந்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த விழாவைக் கொண்டாடும் வகையில் தமிழகத்தில் இருந்தும், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான திரைப்பிரபலங்கள் மலேசியாவில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக, இந்திய சினிமாவின் நடனப் புயல் பிரபுதேவா, ராக் ஸ்டார் அனிருத், பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ஆகியோர் இந்த விழாவில் முன்னிலை வகிக்கின்றனர்.
இவர்களுடன் இணைந்து முன்னணி பாடகர்களான எஸ்.பி.பி. சரண், கிரிஷ், ஹரிஷ் ராகவேந்திரா, திப்பு மற்றும் பாடகிகள் அனுராதா ஸ்ரீராம், சுஜாதா மோகன் போன்ற ஒரு பெரும் இசைப் பட்டாளமே மேடையை அலங்கரிக்க உள்ளனர்.
மேலும், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரமான ரியோ ராஜ் உள்ளிட்ட பலரும் ஏற்கனவே மலேசியாவை சென்றடைந்துள்ளனர். இது தவிர, கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக இதில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.
தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள நட்சத்திரங்களின் பயண வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மலேசியாவின் முக்கிய வீதிகள் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், 'ஜனநாயகன்' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு ஒரு மாபெரும் கலைத்திருவிழாவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
