2026 பொங்கலுக்கு தளபதி, 2027ல் தலைவர்.. கோலிவுட்டின் அடுத்தடுத்த கொண்டாட்டங்கள் ரெடி!
அடுத்தடுத்த ஆண்டுகளில் பொங்கல் பண்டிகையை தங்களது வசமாக்கப்போகும் மாஸ் நடிகர்களின் முழு விவரம் இதோ.
தமிழகத்தின் மிகப்பெரிய பண்டிகையான பொங்கல் திருநாள், இனிவரும் இரண்டு ஆண்டுகளுக்கு கோலிவுட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையப்போகிறது. தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக கருதப்படும் தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரின் படங்கள் அடுத்தடுத்த பொங்கல் ரேசில் களம் இறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஜய் தனது அரசியல் வருகையை அறிவித்துள்ள நிலையில், திரையுலகில் அவரது கடைசிப் படமாக கருதப்படும் ஜனநாயகன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படம், அரசியல் களத்தை மையமாக வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளது. விஜய்யின் திரைப்பயணத்தில் இது கடைசிப் படம் என்பதால், அவரது ரசிகர்கள் இதனை வெறும் திரைப்படமாகப் பார்க்காமல் ஒரு உணர்ச்சிகரமான திருவிழாவாக கொண்டாடத் தயாராகி வருகின்றனர். அதே சமயம், சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகும் பராசக்தி படமும் இதே பொங்கல் ரேசில் இணைய இருப்பதால், பாக்ஸ் ஆபீஸில் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 விஜய்க்கு என்றால், 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு சொந்தமானது. அவரது 173-வது திரைப்படமான தலைவர் 173 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் சிறப்பம்சமே, உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இதனைத் தயாரிப்பதுதான். பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி - கமல் கூட்டணி (தயாரிப்பாளராக) இணைந்திருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'டான்' படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தந்த சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்குகிறார். ரஜினியின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறிவிட்ட அனிருத், இப்படத்திற்கும் இசையமைக்க உள்ளார்.
விஜய்யின் அரசியல் பயணத்தின் தொடக்கமாக 2026 பொங்கல் அமையப்போகிறது. மறுபுறம், 2027 பொங்கலில் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் - சிபி சக்கரவர்த்தி - அனிருத் என்ற மெகா கூட்டணி திரையரங்குகளை அதிரவைக்க காத்திருக்கிறது. இந்த இரண்டு பொங்கல் பண்டிகைகளும் தமிழ் சினிமா வரலாற்றில் வசூல் ரீதியாகவும், கொண்டாட்ட ரீதியாகவும் புதிய மைல்கற்களை எட்டும் எனத் தெரிகிறது.
