தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடி ரோலில் நடித்ததன் மூலம் சில ஹீரோக்கள் பிரபலமாகியுள்ளனர். இப்படியாக மக்கள் மத்தியில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களின் மூலம் பரீட்சியமான இவர்கள் ஒரு சில படங்களில் தங்களது வில்லத்தனமான நடிப்பின் மூலம் மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து காமெடியனாக இருந்து வில்லன் அவதாரம் எடுத்து வெற்றி கண்ட 8 ஹீரோக்களை இங்கு காணலாம்.
நாகேஷ்: 1991 ஆம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், விஜயகுமார் சகோதரர்களாக இணைந்து நடித்த திரைப்படம் தான் சேரன் பாண்டியன். இதில் நாகேஷ் மணியம் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஜாதி ஏற்றத்தாழ்வுகளை மையமாக வைத்து இவர்களுக்குள் வரும் பிரச்சனைகளை மேலும் தூண்டி விடுபவராக நாகேஷ் தனது வில்லத்தனத்தில் மிரட்டி இருப்பார்.
கவுண்டமணி: இயக்குனர் ஆர் எஸ் இளவரசன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் ரகசிய போலீஸ். இப்படத்தில் நக்மா, ராதிகா மற்றும் செந்தில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் கவுண்டமணி பொன்னுரங்கம் என்னும் மிரட்டலான அரசியல்வாதியாக நடித்துள்ளார்.
தேங்காய் சீனிவாசன்: இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் படிக்காதவன். இதில் தேங்காய் சீனிவாசன் ராமநாதன் என்னும் மேனேஜர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும் இப்படத்தில் ரஜினிகாந்த் செய்யாத கொலைக்கு, தண்டனை வாங்கி தர வேண்டும் என்ற எண்ணத்தில் தனது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
சார்லி: மம்முட்டி நடிப்பில் உருவான திரைப்படம் மௌனம் சம்மதம். இதில் இவருக்கு ஜோடியாக அமலா நடித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இதில் சார்லி மம்முட்டிக்கு எதிராக வில்லன் ரோலில் மிரட்டி இருப்பார்.
ஜான் விஜய்: அருள்நிதி நடிப்பில் உருவான திரைப்படம் மௌனகுரு. இதில் இனியா, ஜான் விஜய், உமா ரியாஸ் கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிலும் இப்படத்தில் ஜான்விஜய் மாரிமுத்து என்னும் ரவுடி கலந்த வில்லத்தனமான போலீஸ் ரோலில் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜெகன்: சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் அயன். இதில் தமன்னா, பிரபு, ஜெகன், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஜெகன் சிட்டிபாபு என்னும் கதாபாத்திரத்தில் சூர்யாவின் நண்பராக இருந்து துரோகம் செய்யும் வில்லனாக மாஸ் காட்டி இருப்பார்.
கஞ்சா கருப்பு: சசிகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் சுப்ரமணியபுரம். இப்படத்தில் இவருடன் ஜெய், கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் நண்பர்களாக இருக்கும் இவர்களுக்குள் கஞ்சா கருப்பு நம்பிக்கை துரோகியாக மாறி நண்பனையே கொலை செய்யும் வில்லனாக நடித்துள்ளார்.
தம்பி ராமையா: சமுத்திரக்கனி நடிப்பில் உருவான திரைப்படம் சாட்டை. இதில் தம்பி ராமையா, யுவன் மற்றும் மகிமா நம்பியார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் சிங்கம் பெருமாள் என்னும் கதாபாத்திரத்தில் தம்பி ராமையா சமுத்திரக்கனிக்கு வில்லனாக தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.