விஜயகாந்துக்குப் பின் மொத்த யூனிட்டுடன் சாப்பிடும் 2 நடிகர்கள்.. தூக்கி வைத்து கொண்டாடிய திரையுலகம்

தமிழ் சினிமாவில் மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு பிறகு தன்னுடைய சிறந்த குணங்களால் ஒரு நடிகர் கொண்டாடப்படுகிறார் என்றால் அது விஜயகாந்த் தான். இன்றைய காலகட்டத்தில் அவர் சினிமா மற்றும் அரசியலில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தாலும் அவரைப் பற்றி பேசாத திரை கலைஞர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு மற்றவர்களுக்கு உதவும் குணம் மற்றும் நேர்மையான பண்பு என அத்தனையிலும் சிறந்து விளங்கி இருக்கிறார் விஜயகாந்த்.

ஒரு கட்டுக்கோப்பு இல்லாமல் இருந்த தமிழ் சினிமா கலைஞர்களை நடிகர் சங்கத்தின் மூலம் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தவர் தான் விஜயகாந்த். நடிகர் சங்கத்தின் மூலம் விஜயகாந்த் செய்யாத நற்பணிகளே இல்லை என்று சொல்லலாம். நடிகர் சங்கத்திற்காக அத்தனை நடிகர்களையும் ஒன்று கூட்டி, கலை நிகழ்ச்சிகள் நடத்தி எத்தனையோ கோடி கடன்களை அடைத்து தலை நிமிர செய்தவர் இவர்.

தமிழ் சினிமாவை சார்ந்த சக நடிகர்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் அதில் முன் நின்று, பேசி அந்த சண்டையை தீர்த்து வைப்பதோடு, சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பாகவும் இருந்தவர் விஜயகாந்த். இதை பலரும், தங்களுடைய பேட்டிகளில் மனம் உருகி சொல்லி இருக்கிறார்கள். விஜயகாந்த் அளவிற்கு தைரியமாக இதுபோன்ற செய்தவர்கள் தமிழ் சினிமா நடிகர் சங்கத்தில் வேறு யாருமே இல்லை.

மேலும் விஜயகாந்த்திடம் மற்றும் ஒரு நல்ல பண்பாக சொல்லப்படுவது, சக கலைஞர்களுக்கு உணவு அளிக்கும் விதம். விஜயகாந்தின் பட சூட்டிங் ஆக இருக்கட்டும், அவருடைய அலுவலகமாக இருக்கட்டும் எல்லோருக்கும் வயிறார சாப்பாடு போட்டு அனுப்புவாராம் விஜயகாந்த். மொத்த யூனிட்டுக்கும் விருந்து சாப்பாடு போட்டு, அவர்களுடனே உட்கார்ந்து சாப்பிடும் பழக்கத்தை வைத்திருந்திருக்கிறார் கேப்டன்.

விஜயகாந்த்திற்கு பிறகு அவரைப் போன்று சக நடிகர்களை மதிப்பது, மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் இரண்டு நடிகர்கள் அனைவரது அன்பையும் பெற்று இருக்கின்றனர். அதில் ஒருவர் சின்ன கலைவாணர் விவேக், மற்றொருவர் மயில்சாமி. இவர்கள் இருவரும் கூட எப்பொழுதுமே மொத்த யூனிட் உடன் அமர்ந்துதான் சாப்பிடுவார்களாம்.

அதேபோன்று தங்கள் கூட இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் முதலில் வந்து உதவுபவர்கள் இவர்கள் இரண்டு பேரும் ஆகத்தான் இருந்திருக்கிறார்கள். விவேக் மற்றும் மயில்சாமி இறந்த பிறகு கூட அவர்கள் செய்த நிறைய உதவிகளை பற்றி அவர்களுடன் இருந்த சக நடிகர்கள் மற்றும் பொதுமக்கள் பேசி இருந்தனர். தமிழ் சினிமாவில் விஜயகாந்த்திற்கு பிறகு மயில்சாமியும், விவேக்கும் தான் இது போன்ற நல்ல குணங்களை உடையவர்கள் என்று தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள்.