ஒரு திரைப்படத்திற்கு ஹீரோ எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமான கேரக்டர் வில்லன். ஏனோதானோ என்று வில்லனை போட்டு விட்டால் மொத்த படமும் சொதப்பல் தான். சொல்லப் போனால் ஹீரோக்கள் மாஸாக தெரிய வேண்டும் என்றால் ஹீரோவை எதிர்த்து நிற்கும் வில்லன் வெயிட்டாக இருக்க வேண்டும். இப்போதெல்லாம் வில்லனுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.
எம் என் நம்பியார், அசோகன் போன்ற 60ஸ் வில்லன்கள் ஓய்வு பெற வேண்டிய நேரத்தில் அதாவது 70ஸ் களின் இறுதியில் தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கான ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. அப்போது தான் ரஜினிகாந்தும், கமலஹாசனும் வளர்ந்து வரும் ஹீரோக்களாக இருந்தனர். அவர்களுக்கு தகுந்தாற் போல் வில்லன்கள் யாருமே இல்லை.
ஜெய்சங்கர், மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன் போன்றோரை வில்லனாக போட்டு பார்த்தார்கள். யாருமே ரஜினி, கமலுக்கு எடுபடவில்லை. இவர்கள் இருவருக்கும் ஏற்றாற்போல ஒரு வில்லனை சினிமாவில் இறக்கியே ஆக வேண்டும் என்ற அழுத்தம் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. வில்லனை தேடி அலைந்து கொண்டிருந்தனர்.
அப்போது வந்து அந்த வில்லன் இடத்தை நிரம்பியவர் தான் நடிகர் சத்யராஜ். எம் ஜி ஆர் ரசிகரான இவர் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கோலிவுட்டிற்கு வந்தவர். ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார் சத்யராஜ். இவருடைய நக்கலான பேச்சு மற்றும் கோயம்பத்தூர் பாஷை அனைவரையும் கவர்ந்தது.
தன்னுடைய ஹீரோ கனவையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கமல், ரஜினி படங்களான மூன்று முகம், பாயும் புலி, எனக்குள் ஒருவன், நான் மகான் அல்ல, நான் சிகப்பு மனிதன், காக்கி சட்டை என அடுத்தடுத்து வில்லனாக நடித்துக் கொடுத்தார். இதில் காக்கி சட்டை படத்தில் இவர் பேசிய ‘தகடு தகடு’ என்னும் வசனம் மிகப் பிரபலமானது.
சத்யராஜ் இயக்குனர் பாரதிராஜாவின் கடலோரக் கவிதைகள் மூலம் ஹீரோ ஆனார். அடுத்தடுத்து ஹீரோவாக நடித்து கொண்டிருந்த இவர், கமலஹாசனுக்காக விக்ரம் படத்திலும், ரஜினிக்காக மிஸ்டர் பாரத் படத்திலும் வில்லனாக நடித்துக் கொடுத்தார். சத்யராஜ் ஒரே நேரத்தில் விக்ரம் படத்தில் வில்லனாகவும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தில் ஹீரோவாகவும் நடித்தது குறிப்பிடத்தக்கது.