Fagadh Faasil: மலையாள நடிகராக இருந்தாலும் பகத் பாசில் இப்போது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே பரிச்சயம் ஆகிவிட்டார். ஏற்கனவே புஷ்பா, விக்ரம் என்ற படங்களின் மூலம் தன்னை நிரூபித்த இவர் சமீபத்தில் வெளியான மாமன்னன் மூலம் மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கொடூர வில்லனாக நடித்திருந்த அவரின் நடிப்பு இப்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால் ஹீரோ உதயநிதியை ஓவர் டேக் செய்யும் அளவுக்கு பகத் பாசில் தன் ஆதிக்கத்தை செலுத்தி இருக்கிறார்.
இப்படி நடிப்பு அரக்கனாக மிரள விடும் இவர் இந்த இடத்தை சாதாரணமாக அடைந்து விடவில்லை. ஆரம்ப காலத்தில் பல அவமானங்களை கடந்து தான் தன்னை ஒரு நடிகராக இவர் நிரூபித்திருக்கிறார். இத்தனைக்கும் இவருடைய அப்பா பாசில் மிகப்பெரும் இயக்குனராக இருந்தாலும் அந்த அடையாளம் இவரை காப்பாற்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
எப்படி என்றால் பகத் பாசில் கடந்த 2002 ஆம் ஆண்டு தன்னுடைய இருபதாவது வயதில் தான் திரையுலகிற்கு அறிமுகமானார். ஆனால் அவருடைய முதல் படமே இவருக்கு காலை வாரி விட்டது. அது மட்டுமல்லாமல் அப்பா பெயரை கெடுக்க வந்த வாரிசு என பல விமர்சனங்கள் இவருக்கு கிடைத்தது.
இதனால் அவர் நடிப்பே வேண்டாம் என்று அமெரிக்காவிற்கு படிக்கப் போய்விட்டார். அதைத்தொடர்ந்து ஏழு வருடங்கள் கழித்து தான் அவர் மீண்டும் நடிப்பு பக்கம் திரும்பினார். ஆனால் இந்த முறை மிஸ் ஆக கூடாது என்ற வெறியில் அவர் தன் நடிப்பை மெருகேற்றிக் கொண்டார். அதைத்தொடர்ந்து நடிகை நஸ்ரியாவையும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இப்படி அடுத்தடுத்து இவருக்கு எல்லாமே ஏறுமுகமாகவே இருந்தது. அந்த வகையில் பல படங்களில் நடித்த இவர் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு ரசிகர்களையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டார். இவ்வாறாக நஸ்ரியாவை கைப்பிடிப்பதற்கு முன் பல அவமானங்களை கடந்து வந்த மாமன்னன் ரத்னவேல் 7 வருடங்களில் தன் திறமையை நிரூபித்தது குறிப்பிடத்தக்கது.