கமல் இப்போது பம்பரமாக சுழன்று நடித்துக் கொண்டிருக்கிறார். நான்கு வருடமாக சினிமா பக்கம் வராத ஆண்டவர் தற்போது அதை ஈடு கட்டும் வகையில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும், தயாரிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் பல இயக்குனர்களும் அவரிடம் கதை சொல்ல காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதில் கமலுடன் சேர்ந்து படம் செய்வதற்காக ஒரு இயக்குனர் ஏழு வருடமாக காத்துக் கொண்டிருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல கமலை வைத்து ஏற்கனவே உத்தம வில்லன் என்ற திரைப்படத்தை தயாரித்த லிங்குசாமி தான். முன்னணி இயக்குனராக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் இவர் திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்.
அந்த வகையில் இவர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான உத்தம வில்லன் திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்சுடன் இணைந்து தயாரித்திருந்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் பெறவில்லை. இதனால் லிங்குசாமிக்கு பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடி ஏற்பட்டது.
சொல்லப்போனால் இந்த படத்திற்கு பிறகு தான் அவர் மிகப்பெரும் கடனாளியாக மாறி ரொம்பவும் சிரமப்பட்டார். இதற்கு முழு காரணமும் கமல் மட்டும்தான் என்ற ரீதியில் செய்திகள் பரவியது. மேலும் இந்தப் படத்திற்கு பிறகு லிங்குசாமியை கமல் கண்டுகொள்ளாமல் டீலில் விட்டு விட்டார், லிங்குசாமிக்கு ஒரு படம் கூட அவர் நடித்துக் கொடுக்கவில்லை என்றும் கூறினார்கள். தற்போது அதன் உண்மை நிலவரத்தை லிங்குசாமி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, எனக்கு ஏற்பட்ட கடன் நெருக்கடி கமல்தான் காரணம் என்று கூறுவது சரியல்ல. அவரை யாரும் குறை சொல்ல வேண்டாம். அவரால்தான் நான் கடனாளி ஆனேன் என்று ஒருபோதும் என் வாயால் சொல்ல மாட்டேன். கூடிய விரைவில் எங்களின் கூட்டணி இணைந்து மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுக்கும்.
நிச்சயம் நாம் இணைந்து படம் பண்ணுவோம் என்று கமல் எனக்கு உறுதி கொடுத்திருக்கிறார் என்று லிங்குசாமி தெரிவித்துள்ளார். இதன் மூலம் இது நாள் வரை கமல் மீது இருந்த ஒரு கெட்ட பெயர் நீங்கியுள்ளது. மேலும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் உருவாக இருக்கும் இந்த கூட்டணி எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.