Leo Audio Launch: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் தற்போது அதற்கான ப்ரமோஷன் பணிகளை தயாரிப்பு தரப்பு மும்முரமாக செய்து வருகிறது. அதன் முதல் கட்டமாக இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது.
இதுக்குத்தானே இத்தனை நாள் காத்திருந்தோம் என இப்போது ரசிகர்களும் உற்சாகமாகி இருக்கின்றனர். ஏனென்றால் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன பருந்து காகம் கதை கடும் விமர்சனத்திற்கு ஆளானது. இது விஜய்க்காக தான் சொல்லப்பட்டது என்ற பேச்சுக்களும் பரபரப்பை கிளப்பியது.
ஆனால் விஜய் ரசிகர்கள் லியோ ஆடியோ லான்ச் அனைத்திற்கும் பதில் சொல்லும் என்று மார்தட்டி வந்தனர். இப்போது அதற்கான நேரமும் அமைந்துவிட்டது. அந்த வகையில் வரும் 30ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக மாவட்ட வாரியாக ரசிகர்களுக்கு 200 பாஸ்களும் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அரங்கத்திற்கு வெளியே படம் சம்பந்தப்பட்ட போஸ்டர்களோ, பேனர்களோ இருக்கக் கூடாது என ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் அவர்கள் தங்களுடைய சொந்த வாகனங்களில் தான் வர வேண்டும் மற்றும் பொதுமக்களை எக்காரணம் கொண்டும் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சமீபத்தில் ஏ ஆர் ரகுமான் நடத்திய இசைக்கச்சேரி பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியது.
அதனாலேயே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை லியோ டீம் எடுத்துள்ளது. அந்த வகையில் கழுகுக்கு லியோ என்ன பதிலடி கொடுக்க போகிறார் என்றும் அவருடைய குட்டிக்கதை எந்த மாதிரியான பரபரப்பை ஏற்படுத்தும் என்பதையும் நாம் விரைவில் தெரிந்து கொள்ளலாம்.