பொதுவாக நடிகர்கள், நடிகைகளை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான் மார்க்கெட் கொடி கட்டி பறக்கும். அதன் பின்னர் தொடர் தோல்விகளை சந்திப்பதோடு சிலர் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள். ஒரு சிலர் தொடர் வெற்றியை பார்த்துவிட்டால் கதை தேர்வில் மெத்தனம் காட்டி தோல்வியை சந்திப்பார்கள்.
நடிகர் விஜய் சேதுபதியை பொறுத்தவரை சினிமாவில் ரொம்பவும் கஷ்டப்பட்டு முன்னேறியவர். கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வெற்றி கண்டார். கதாநாயகனாக இவர் நடித்த முதல் படமே தேசிய விருது படமாக அமைந்தது. அடுத்தடுத்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் போன்ற வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.
தொடர் வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் மக்கள் செல்வனாக இடம் பிடித்தார். ஆனால் விஜய் சேதுபதி கடந்த ஒன்றிரண்டு வருடங்களாகவே நடித்து வரும் படங்கள் சொல்லி கொள்ளும் அளவிற்கு அமையவில்லை. இதனால் ரசிகர்களின் கேலி, கிண்டலுக்கு கூட ஆளாகி இருக்கிறார். சமீபத்தில் வெளியான டிஎஸ்பி படம் கூட இவருக்கு தோல்வி படமாகவே அமைந்தது.
விஜய் சேதுபதியை போல தான் நடிகர் விஷாலும். ஆரம்பத்தில் சண்டைக்கோழி, திமிரு போன்ற ஹிட் படங்களை கொடுத்தார். விஷால் ஒரு ஆக்சன் ஹீரோவாக வெற்றி பெறுவார் என கோலிவுட் வட்டாரம் எதிர்பார்த்தது. ஆனால் இவரோ நடிகர் சங்கம், அரசியல் என திசை மாறி மொத்தமாக சொதப்பி கொண்டிருக்கிறார்.
கடந்த சில வருடங்களாக நடிகர் விஷாலுக்கு சொல்லி கொள்ளும் அளவிற்கு படங்களே இல்லை. சொல்லப்போனால் விஷால் என்று ஒரு நடிகர் இருக்கிறார் என்பதை மக்களில் பலரும் மறந்தே விட்டனர். சமீபத்தில் ரிலீஸ் ஆன லத்தி படம் படுதோல்வியடைந்தது. கிட்டத்தட்ட இப்போது நடிகர் விஷாலும், விஜய் சேதுபதியும் ஒரே சூழ்நிலையில் தான் இருக்கிறார்கள்.
தொடர் தோல்வி படங்கள் கொடுத்தாலும் தங்களுடைய சம்பளத்தை குறைத்து கொள்ள மறுக்கிறார்கள். விஜய் சேதுபதி 20 கோடியும், விஷால் 17 கோடியும் சம்பளமாக வாங்குகிறார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் தொடர் தோல்வி படங்களை கொடுத்து வரும் இவர்களை நம்பி இனிமேல் பிரயோஜனம் இல்லை என்று வேறு ஹீரோ பக்கம் செல்கின்றனர் .