சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு ஏற்ப வலம் வரும் ரஜினி ஒவ்வொரு விஷயத்திலும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார். சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அவர் செய்யும் பல விஷயங்கள் நம்மை வியக்க வைக்கிறது. அதற்கு உதாரணமாக தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அதாவது தயாரிப்பாளர் வி ஏ துரை மருத்துவ செலவிற்காக கஷ்டப்பட்டு வருவது அனைவருக்கும் தெரியும். அது சம்பந்தமாக அவர் வெளியிட்டு இருந்த வீடியோவை பார்த்து சூர்யா உட்பட பலரும் அவருக்கு உதவி செய்தனர். அதையும் தாண்டி அவரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தர மறுத்த இயக்குனர் பாலா கூட 25 ஆயிரம் பண உதவி செய்திருக்கிறார்.
இப்படி பலரும் உதவி செய்து கொண்டிருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டாரும் தன் பங்குக்கு உதவி செய்வதாக தொலைபேசியில் அவருக்கு வாக்கு கொடுத்தார். அதையடுத்து அவர் செய்த விஷயம் தான் பாராட்டுகளை பெற்று வருகிறது. பொதுவாக ரஜினி மொபைல் போன்களை அதிகம் பயன்படுத்துவதில்லை. அதனால் சோசியல் மீடியாவில் என்ன நடக்கிறது என்பதும் அவருக்கு உடனுக்குடன் தெரியவும் வாய்ப்பில்லை.
அந்த வகையில் வி ஏ துரை வெளியிட்டு இருந்த வீடியோவையும் ரஜினி முதலில் பார்க்கவில்லை. வேறு ஒரு தயாரிப்பாளர் மூலமாகத்தான் இந்த விவரம் அவருக்கு தெரிய வந்திருக்கிறது. உடனே பதறி போன சூப்பர் ஸ்டார் தயாரிப்பாளருக்கு போன் செய்து 10 லட்சம் பணம் தருகிறேன் சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். போதவில்லை என்றாலும் தயங்காமல் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
மேலும் எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள். அதன் பில்லை என்னிடம் அனுப்பினால் உடனே செட்டில் செய்து விடுகிறேன் என்று கூறினாராம். ஏனென்றால் ரஜினி கொடுத்த பணம் தயாரிப்பாளருக்கு சரியான முறையில் சென்று சேருமா என்ற பயம் அவருக்கு இருந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் கடன்காரர்கள் யாராவது அதை வாங்கி சென்று விடுவார்களோ எனவும் பயந்து இருக்கிறார்.
அப்படி நடந்து விட்டால் அவருடைய சிகிச்சை பாதிக்கப்படும். அவரும் பணத்தைக் கேட்க தயங்குவார் என்று யோசித்து தான் ரஜினி இப்படி ஒரு விஷயத்தை செய்திருக்கிறார். இந்த செயல்தான் தற்போது அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. உதவி செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் அது சரியான முறையில் சென்று சேருகிறதா என்பது வரை யோசிக்கும் ரஜினி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இதன் மூலம் அவர் என்றுமே சூப்பர் ஸ்டார் தான் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.