வாய்ப்பு கொடுத்து அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்.. விழுந்த இடத்திலேயே ஜெயித்து காட்டிய ஷங்கர்

Director Shankar: கோலிவுட் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் இயக்குனர் ஷங்கர் முதன் முதலில் 1993 ஆம் ஆண்டு ஜென்டில்மேன் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ஊழலை பற்றி தைரியமாக பேசி படம் எடுத்த இயக்குனர் இவர். இந்த படத்தில் முதல் முதலில் கமலஹாசன் நடிப்பதாக இருந்தது. அதன் பின்னர் கதை சரத்குமாருக்கு சொல்லப்பட்டு அவரும் நடிக்க முடியாததால் நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் நடித்தார்.

ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் ஷங்கரை தமிழ் சினிமாவிற்கு அடையாளப்படுத்தியது அந்த படத்தின் தயாரிப்பாளர் கே டி குஞ்சு மோன் தான். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தயாரிப்பாளர்கள் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு ஷங்கருடன் படம் பண்ண வந்தார்கள். ஆனால் ஷங்கர் தனக்கு முதன் முதலில் வாழ்க்கை அளித்த தயாரிப்பாளர் குஞ்சுமோனுடன் தான் அடுத்த படம் என்பதில் ரொம்பவும் உறுதியாக இருந்தார்.

ஜென்டில்மேன் திரைப்படம் வெற்றி பெற்ற அடுத்த வருடமே ஷங்கர் மற்றும் குஞ்சுமோன் இணைந்து பணியாற்றிய திரைப்படம் தான் காதலன். இந்த படத்தில் பிரபுதேவா, நக்மா, வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். காதலன் திரைப்படமும் ஷங்கருக்கு சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்துவிட்டது. ஆனால் இந்த படத்தின் போது ஷங்கர் குஞ்சுமோனால் ரொம்பவும் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

ஜென்டில்மேன் மிகப் பெரிய ஹிட் படம் என்பதால் அடுத்த படத்திற்கு ஷங்கர் சம்பளம் கொஞ்சம் அதிகம் எதிர்பார்த்து இருக்கிறார். தயாரிப்பாளர் குஞ்சுமோன் இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு நடந்து வந்து கெஞ்சி என்கிட்ட வாய்ப்பு கேட்டாய் இப்போது என்னிடமே சம்பள விஷயத்தில் கறார் காட்டுகிறாயா ஒழுங்காக படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு போ என்று ரொம்பவும் அவமானப்படுத்தி பேசி இருக்கிறார்.

அந்த அவமானத்தையும் பொருட்படுத்தாமல் ஷங்கர் காதலன் திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக்கி குஞ்சுமோன் கையில் கொடுத்திருக்கிறார். இப்போது தயாரிப்பாளர் குஞ்சுமோன் நிலைமை மோசமாக இருந்தும் அவரை ஷங்கர் கண்டு கொள்ளவே இல்லை. அந்த அளவுக்கு அவர் பட்ட அவமானங்கள் அவரை மாற்றி இருக்கிறது.

உலக நாயகன் கமலஹாசன் உடன் இந்தியன் திரைப்படம், அர்ஜுனை வைத்து முதல்வன் திரைப்படம் எடுத்த பிறகு ஷங்கர் இன்றுவரை தமிழ் சினிமாவில் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இயக்குனராக இருக்கிறார். அவர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுப்பதற்கும் அவர் எவ்வளவு பட்ஜெட் சொன்னாலும் முதலீடு போடுவதற்கும் இன்று தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி காத்துக் கொண்டிருக்கின்றனர்.