சிவகார்த்திகேயன் இப்போது எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறார். ஆரம்பத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த இவர் இன்று பாக்ஸ் ஆபிஸ் ஹீரோக்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருக்கிறார். இதற்கு இவருடைய திறமை, அதிர்ஷ்டம் என்ற காரணங்கள் இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் சிலர் இவரை வளர்த்துவிட்டது தான் முக்கிய காரணமாக இருக்கிறது.
அப்படி இவருடைய வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக இருந்த ஒரு திரைப்படம் என்று பார்த்தால் மான் கராத்தே படத்தை சொல்லலாம். இந்த படத்திற்கு முன்பாக அவர் எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மான் கராத்தே படத்தில் ஒரு ஸ்பெஷல் இருந்தது. அதாவது இப்படத்தில் அப்போது முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்த ஹன்சிகா, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இது பலருக்கும் மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது.
ஆனால் இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை தயாரிப்பாளர் மதனுக்கு தான் போய்ச் சேரும். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸுடன் இணைந்து எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் மதன் தயாரித்திருந்தார். ஆரம்பத்தில் இந்த பட வாய்ப்பை மறுத்த ஹன்சிகாவுக்கு இரு மடங்கு சம்பளம் கொடுத்து தான் மதன் அவரை கமிட் செய்திருந்தார்.
அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கும் 50 லட்சம் சம்பளமாக பேசப்பட்டிருக்கிறது. அதன் பிறகு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது. இதனால் மகிழ்ந்து போன மதன், பேசிய சம்பளத்தை விட அதிகமாக சிவகார்த்திகேயனுக்கு கொடுத்திருக்கிறார். அதாவது அந்த 50 லட்சம் மட்டுமல்லாமல் மேலும் ஒன்றரை கோடி ரூபாயையும் சேர்த்து கொடுத்திருக்கிறார். ஆக மொத்தம் சிவகார்த்திகேயன் அந்த படத்திற்காக இரண்டு கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருக்கிறார்.
அதனுடன் சேர்த்து தயாரிப்பாளர் ஒரு காரையும் அவருக்கு பரிசளித்திருக்கிறார். அதுவரை மிகவும் சாதாரண கார் வைத்திருந்த சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் மதன் ஆடி கார் ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார். இப்படியாக இந்த படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறினார். ஆனால் ஒரு காலத்தில் தன்னை வளர்த்து விட்ட தயாரிப்பாளர் மதனை இப்போது அவர் கண்டு கொள்வதே கிடையாதாம். தற்போது மிகுந்த கஷ்டத்தில் இருக்கும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனிடம் தன் படத்தில் நடிக்குமாறு கேட்டிருக்கிறார்.
ஆனால் அதற்கு இப்போது வரை அவர் எந்தவிதமான பதிலும் கூறவில்லையாம். இதுதான் தற்போது திரையுலகின் பரப்பரப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் மதன் சிவகார்த்திகேயனுக்கு இவ்வளவு பரிசுகள் கொடுத்து கௌரவிப்பதை பார்த்த பலரும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இருந்திருக்கிறார். இதெல்லாம் தெரிந்தும் சிவகார்த்திகேயன் அந்த நன்றியை மறந்து விட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.