இணையத்தில் கசிந்த தலைவர் 170 டைட்டில்.. ஜெயிலரை தொடர்ந்து அடுத்த சம்பவத்திற்கு தயாரான ரஜினி

Thalaivar 170:  ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியனாக தியேட்டரையே அலற விட்டிருந்தார் ரஜினி. இதுவரை ரஜினி படம் இல்லாத அளவுக்கு வசூலை வாரி குவித்திருந்தது. அந்த வகையில் தற்போது வரை 518 கோடி வசூல் அள்ளி இருக்கிறது.

ஜெயிலர் கொடுத்த வெற்றியால் உடனடியாக தனது அடுத்த படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் ரஜினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பின்னணி வேலைகள் நடந்து வருகிறது.

அடுத்ததாக ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கிறார். லைக்கா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பூஜை வருகின்ற 26 ஆம் தேதி போடப்படுகிறது. மேலும் உடனடியாகவே படப்பிடிப்பும் தொடங்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இப்படத்தின் டைட்டில் வெளியாகி இருக்கிறது.

அதாவது தலைவர் 170 படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்கிறார். என்கவுண்டருக்கு எதிரான ஆளாக இருக்கும் ரஜினி எவ்வாறு ரவுடிகளை கையாளுகிறார் என்பது தான் இப்படத்தின் கதை. இதில் வேட்டையன், சோகரிகன், மிருகசீவனன், ரகுபதி போன்ற பெயர்கள் அடிபட்டுக் கொண்டு இருக்கிறது.

ஆனால் இதில் கிட்டத்தட்ட 90% வேட்டையன் என்ற டைட்டில் வைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே சந்திரமுகி படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளில் ரஜினி வேட்டைனாக எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரம் ரஜினிக்கு மிகப் பெரிய பெயரை வாங்கி கொடுத்த நிலையில் இதை டைட்டிலாக வைக்க முயற்சி செய்கின்றனர்.

வருகின்ற 26 ஆம் தேதி பூஜை நடக்க உள்ள நிலையில் தலைவர் 170 படத்தின் டைட்டிலும் வெளியாக வாய்ப்பிருக்கிறது. ஆகையால் ரஜினி ரசிகர்கள் இந்த நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். எனவே ஜெயிலர் படத்தை விட தரமான சம்பவத்தை இந்த படத்தில் ரஜினி செய்வார் என எதிர்பார்க்கலாம்.