1. Home
  2. விமர்சனங்கள்

800 வருடப் பழமையான மர்மம்.. திரௌபதி 2 முழு விமர்சனம்!

draupathi-2-review

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரௌபதி 2  படத்தின் விமர்சனம்.


இயக்குநர் மோகன் ஜி என்றாலே சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கும். அந்த வகையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள படம் திரௌபதி 2. நேதாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரித்துள்ள இந்த படத்தில், ரிச்சர்ட் ரிஷி மீண்டும் நாயகனாக களமிறங்கியுள்ளார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவும், அதே சமயம் 13-ம் நூற்றாண்டின் வரலாற்றுப் பின்னணியையும் இணைத்து இந்தப் படம் ஒரு 'மிஸ்டரி டிராமா'வாக உருவாகியுள்ளது.

திரௌபதி முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் இருந்து இரண்டாம் பாகம் தொடங்குகிறது. நாயகன் ரிச்சர்ட், தனது குழந்தையுடன் ஒரு கிராமத்தில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஆனால், அந்த அமைதியை குலைக்கும் விதமாக ஒரு சர்ச்சை வெடிக்கிறது. அந்த ஊர் மக்களின் நிலங்களை வக்பு வாரியம் உரிமை கோருவதாகக் கூறி சிக்கல் எழுகிறது. அந்த நிலப்பரப்பிற்குள் ஒரு பழமையான கோயிலும் இருக்கிறது. தங்களின் பூர்வீக நிலத்தையும், வழிபாட்டுத் தலத்தையும் மீட்க ஊர் மக்களைத் திரட்டி ரிச்சர்ட் போராட்டத்தில் குதிக்கிறார்.

இந்தச் சூழலில் தான் வெளிநாட்டிலிருந்து ரக்ஷனா இந்துசூடன் அந்த ஊருக்கு வருகிறார். சிதிலமடைந்த அந்தக் கோயிலைப் புனரமைக்க (Renovation) அவர் எடுக்கும் முயற்சி கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. கோயிலுக்குள் நுழையும் ரக்ஷனாவிற்கு சில மர்மமான அதிர்வுகள் ஏற்படுகின்றன. அவருக்குத் தன் கடந்த கால நினைவுகள் வந்து செல்கின்றன. 13ம் நூற்றாண்டில் ரிச்சர்ட் மற்றும் ரக்ஷனா தம்பதியாக வாழ்ந்ததும், அப்போது அந்தக் கோயிலைச் சுற்றி நடந்த வரலாற்றுச் சம்பவங்களுமே படத்தின் இரண்டாம் பாதியை ஆக்கிரமிக்கின்றன.

முதல் பாகத்தை விட இதில் ரிச்சர்ட் மிகவும் நிதானமாகவும், எமோஷனலாகவும் நடித்துள்ளார். தந்தை பாசம் மற்றும் போராட்ட குணம் என இரண்டிலும் முத்திரை பதிக்கிறார். அனுபவம் வாய்ந்த நடிகர்களான நட்டி நட்ராஜ் மற்றும் வேல ராமமூர்த்தி ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். அவர்களின் வசனங்கள் தியேட்டரில் கைதட்டல்களைப் பெறுகின்றன.

13-ம் நூற்றாண்டின் கதையை தற்கால அரசியலோடு இணைத்த விதம் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. கலை இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு அந்தப் பழங்கால காட்சிகளுக்கு நம்பகத்தன்மையைத் தருகின்றன. தற்போதைய சூழலில் நில உரிமைகள் குறித்த விவாதங்கள் அதிகம் நடக்கும் வேளையில், இந்தப் படம் பல முக்நட்ராஜ்கியக் கேள்விகளை எழுப்புகிறது.

முதல் பாதியில் சில இடங்கள் மெதுவாக நகர்வது போன்ற உணர்வைத் தருகிறது. கதைக்குள் செல்வதற்கு சற்று கூடுதல் நேரம் எடுத்துக் கொள்வது போலத் தெரிகிறது. சில இடங்களில் வசனங்கள் மிகவும் நேரடியாகவும், ஒரு குறிப்பிட்ட தரப்பை விமர்சிப்பது போலவும் இருப்பதால், அது பொதுவான ரசிகர்களுக்கு மாறுபட்ட கருத்தை உருவாக்கலாம். பின்னணி இசை சில இடங்களில் காட்சிகளின் வீரியத்தைக் குறைப்பதாக உள்ளது. இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

சினிமாபேட்டை ரேட்டிங் : 3.5/5

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.