மீண்டும் கவ்ன்டர் காமெடியனாக வரும் சந்தானம்.. 30 வருடம் கழித்து நடிக்கும் நாகேஷ் கதாபாத்திரம்

கடந்த 7 வருடங்களாக சந்தானம் மற்ற ஹீரோக்கள் படத்தில் காமெடியனாக நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். கடைசியாக சந்தானம் காமெடியனாக நடித்த படம் “எனக்கு வாய்த்த அடிமைகள்”. அந்த படமும் வெளிவந்து கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆகிவிட்டது.

சந்தானத்திற்கு ஹீரோவாக கை கொடுத்த முதல் படம் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” இந்த படத்தில் 3 ஹீரோக்களில் ஒருவராக நடித்தாலும், இந்தப் படம் தான் கதாநாயகன் அந்தஸ்து ஆசை கொடுத்து பிள்ளையார் சுழி போட்டது. அதன் பின் 2017ஆம் ஆண்டுக்குப் பின் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடிக்க முடிவெடுத்து விட்டார்.

சர்வர் சுந்தரத்தில் ஆரம்பித்து, இங்க நான் தான் கிங் படம் வரை கிட்டத்தட்ட 16 படங்களில் ஹீரோவாக மட்டுமேநடித்துள்ளார். காமெடியனாக ஜெயித்த சந்தானம் ஹீரோவாக தோற்று விட்டார் என்றே கூறலாம். ஹீரோவாக நடித்த 17 படங்களில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை வாரிக் கொடுத்தது என்னமோ ஐந்து படங்கள்தான்.

இப்போது கூட சந்தானம் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற வைராக்கியத்தில் இருக்கிறார். ஆனால் அவரை மீண்டும் காமெடியனாக திரையில் கொண்டு வருகிறது 12 வருடங்களுக்குப் முன் எடுக்கப்பட்ட படம்.

30 வருடம் கழித்து நடிக்கும் நாகேஷ் கதாபாத்திரம்

சுந்தர் சி, விஷாலை வைத்து பல வருடத்திற்கு முன் எடுக்கப்பட்ட படம் மதகதராஜா. 2012இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த படம் இன்று வரை ரிலீஸ் ஆகவில்லை. படம் முடிவுற்ற போதிலும் வியாபாரம் ஆகாமலும், பண வசதி இல்லாமலும் கிடப்பில் போடப்பட்டது. இப்பொழுது செப்டம்பர் மாதம் அந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.

மதகதராஜா படத்தின் மூலம் பழைய சந்தானம் மீண்டும் திரையில் வருகிறார்.1994ஆம் ஆண்டு வெளிவந்த மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் பிணமாக நடித்திருப்பார். அதேபோல் மதகதராஜா படத்திலும் சந்தானம் பிணமாக நடித்து காமெடி செய்து அசத்தியிருக்கிறாராம். பல வருடங்களுக்கு பிறகு காமெடியனாக சந்தானத்தை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

Next Story

- Advertisement -