சினிமா துறையே கொரோனா தாக்கத்தினால் பெரும் அடிவாங்கி உள்ளதால், தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மேடேறி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு பிறகு, மீண்டும் நாளை மறுதினம் பெரும்பாலான திரையரங்குகள் திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில் திரைக்கு தயாராகி உள்ள 40 படங்கள் வரிசையாக வெளியிடப்பட உள்ளது. அதில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் ‘தலைவி’. இந்தப் படம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படம் என்பதால், இந்தப்படத்தில் ஜெயலலிதாவை தாண்டி எம்ஜிஆர் மற்றும் கருணாநிதியின் கதாபாத்திரம் மிக முக்கியமாக பேசப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் தலைவி படத்தின் ட்ரைலரில் எம்ஜிஆர் கதாபாத்திரம் கூட காண்பிக்கப்பட்டது. ஆனால் கருணாநிதியின் கதாபாத்திரத்தைப் பற்றி சிறிதும் காட்டாததால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் ஒரு சில காட்சிகள் திமுகவை ஆதரித்து எடுக்கப்பட்டது.
எனவே ஜெயலலிதா அவர்களின் அரசியல் எதிரி கருணாநிதி என்று, அவரே பலமுறை கூறியுள்ள நிலையில், ஜெயலலிதாவின் பயோபிக் படமான தலைவி படத்தில் கருணாநிதியை எப்படி காட்டியிருக்கின்றனர் என்று கேள்வி எழுகிறது. அதேபோல் ஜெயலலிதா அவர்களின் அரசியல் வளர்ச்சியிலும், திரையுலக வாழ்க்கையிலும் முக்கிய பங்கு வகிக்கும் எம்ஜிஆர் கதாபாத்திரமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும், எம்ஜிஆர் ஆக அரவிந்த் சாமியும் நடிக்கின்றனர். ஆனால் கருணாநிதியாக யார் நடித்திருக்கிறார்கள் என்று படக்குழு சஸ்பென்சாக வைத்துள்ளது.

ஆகையால் இந்த தலைவி படத்தில் எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி ஆகியோரின் கதாபாத்திரத்தை எப்படி சித்தரித்துள்ளனர் என்பதைப் பொறுத்தே, தலைவி படத்திற்கு அரசியல்ரீதியாக ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பும் என்பதே திரை விமர்சகர்களின் கருத்தாகும்.