பீட்சா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். அதனைத் தொடர்ந்து ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கினார்.
இவர் தற்போது விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், பாபிசிம்ஹா ஆகியோர் நடிப்பில் உருவாகும் மகான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் விக்ரம் மற்றும் சிம்ரன் இணையும் முதல் திரைப்படம் ஆகும். இதற்கு முன்பு இவர்கள் வேறு எந்த திரைப்படத்திலும் இணைந்து நடித்ததில்லை.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மகான் திரைப்படத்தை பற்றி ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, விக்ரம் சாருடன் இணைந்து பணியாற்றுவது என்னுடைய கனவு. அது மகான் திரைப்படத்தின் மூலம் நிறைவேறி இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் விக்ரம் அவரது மகனான துருவ் உடன் இணைந்து நடிக்கும் பல வாய்ப்புகளை மறுத்ததாகவும் மகான் திரைப்படத்தின் கதை பிடித்ததனால் முதலில் தயங்கியவர் பின்னர் ஒப்புக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
இத்திரைப்படம் அப்பா மகன் இருவருக்கிடையே உள்ள உறவினை பற்றியதாகும். இவர்களுக்கு மட்டும் இல்லாமல் பாபிசிம்ஹா, சிம்ரன் ஆகியோர் தங்கள் நடிப்புத் திறமையை காட்டும் விதமாக இப்படம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரல் ஆன நிலையில் விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
