புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

குறி வச்சா.. இறை விழும்.. 1000 கோடி இழப்பு.. தமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை கோடி மோசடியா? அப்போ இந்தியா முழுக்க?

சமூகத்தில், சமூக வலைத்தளங்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், சைபர் கிரைம் குற்றங்கள் ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சைபர் குற்றங்களான ஹேக்கிங் இணைய நிதி மோசடிகள், KYC மோசடி, கிரிப்டோகரன்சி மோசடிகள், டிஜிட்டல் கைது போன்றவை மிகவும் அதிகமாக நிகழ்கின்றன. பெயர்கள் மட்டும் தான் மாறுகிறதே தவிர, அனைத்து மோசடியும், பணத்திற்காக தான் நடக்கிறது.

சமூகத்தில் நடக்கும் மற்ற குற்றங்களில் இருந்து சைபர் கிரைம் வேறுபட்டது. காரணம் அது எங்கே யார் செய்கிறார்கள் என்று எளிதில் கண்டு பிடிக்க முடியாது. இதனால், அரசு, வணிகம் முதல் குடிமக்கள் வரை அனைத்து தரப்பினர்களையும் பாதிக்கிறது.

உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தால் உருவாக்கப்பட்ட CFCFRMS, டிஜிட்டல் வங்கி, credit/debit card பயன்பாடு, பணம் செலுத்துதல் ஆகியவற்றால் ஏற்படும் நிதி இணைய மோசடிகள் மற்றும் பண இழப்புகளை விரைவாகப் புகாரளிக்க உதவுகிறது. ஆனால் பல நேரங்களில், இவற்றை தொடர்புகொள்ள முயற்சிக்கும்போது, connect ஆவதில்லை என்பது தான் உண்மை..

மேலும், இணைய புகார்களை பதிவு செய்ய பாதிக்கப்பட்டவர்கள் யாரும் நிலையத்திற்கு செல்ல தேவையில்லை. எந்த நேரமும்
தாமதமும் இன்றி புகார்கள் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் அல்லது 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், இதிலும் பெரிதாக ரெஸ்பான்ஸ் இல்லை என்றே பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், நாளுக்கு நாள் சைபர் மோசடி அதிகரித்து வரும் நிலையில், இதனால் எப்பேர்ப்பட்ட பாதிப்பு நிகழ்ந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை சைபர் மோசடியில் சிக்கி பொதுமக்கள் ரூ. 1116 கோடி இழந்துள்ளதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் சைபர் கிரைம் மோசடியில் சிக்கிய பணத்தை இழந்ததாக இந்தாண்டு மட்டுமே இதுவரை 91,161 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இது மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சைபர் கிரைமில் பொதுமக்கள் சிக்காமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் யாரையும் கைது செய்யமுடியாது. ஆனால் சில நேரங்களில், உளவியல் ரீதியாக மக்களை அணுகும்போது, அவர்களையே அறியாமல் இரையாகி விடுகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News