Tamil Comedy Actors: தமிழ் சினிமாவில் 2023 அதிரடி புரட்சியாக நகைச்சுவை நடிகர்கள் எல்லாம் இப்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பிட்டு சொல்லக் கூடிய இந்த மூன்று காமெடி நடிகர்கள் டாப் ஹீரோக்களுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் பின்னி பெடல் எடுக்கின்றனர்.
சூரி: பல வருடங்களாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த சூரி முதல் முதலாக ஹீரோவாக நடித்த படம் தான் விடுதலை. வெற்றிமாறன் தனக்கே உரித்தான பாணியில் விடுதலை படத்தை இயக்கி சூரிக்கு இருக்கும் வேறொரு முகத்தை திரை போட்டு காட்டினார். அதிலும் சூரி அதிரடி சண்டை காட்சிகளிலும் சரி, காதலியுடன் செய்யும் ரொமான்ஸ் காட்சிகளிலும் சரி அறிமுக கதாநாயகன் போல் இல்லாமல் பிசிறு தட்டாமல் நடித்து அசத்தினார்.
இதன் பிறகு அவருக்கு ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்புகளை குவிந்து கொண்டிருக்கிறது. தற்போது முற்றிலும் செம ஹேண்ட்சம் ஆக மாறி இருக்கும் சூரியைப் பார்த்தால் அசந்து போய்விடுவீர்கள். அந்த அளவிற்கு தன்னையே மெருகேற்றி இருக்கிறார்.
யோகி பாபு: கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்து அசத்திய யோகி பாபு, முதல் முதலாக உணர்ச்சி மிகுந்த ஹீரோவாக தன்னை வெளிப்படுத்திய படம் தான் பொம்மை நாயகி. இந்த படத்திற்கு முன்பே கூர்கா, மண்டேலா போன்ற படங்களிலும் இவர் கதாநாயகனாக நடித்தார். ஆனால் இந்த படத்தில் அவரை பாசமிகு தந்தையாக, பக்கா சென்டிமென்ட் ஹீரோவாக காட்டினர். தேநீர் வியாபாரி வேலுவாக நடித்த யோகி பாபு, தன்னுடைய 9 வயது மகளுக்காக நீதி கேட்கும் போராட்டம் படத்தை பார்ப்போரே கண் கலங்க வைத்தது.
வடிவேலு: சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படம் தான் மாமன்னன். இந்த படம் சாதி வேறுபாட்டை அப்பட்டமாக காட்டியதால் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இதில் வடிவேலு கொஞ்சம் கூட தன்னை ஒரு காமெடி நடிகராக காட்டாமல் டெரர் பீஸ் ஆக நடித்திருக்கிறார்.
இவர் திரையில் தோன்றினால் யாருக்கும் சிரிப்பு வரவில்லை. அந்த அளவிற்கு இந்த படத்தில் தன்னை ஒரு குணச்சித்திர நடிகராக நிரூபித்திருக்கிறார். நிஜமாகவே இந்த படத்தில் உதயநிதியின் நடிப்பை ஓவர் டேக் செய்து விட்டு டாப்பில் நிற்கிறார். இதுவரை காமெடி நடிகராகவே பார்த்த வடிவேலுவை முதன்முதலாக முக்கியத்துவமான குணச்சித்திர கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கே வித்தியாசமாக இருந்தது. இவருடைய நடிப்பை பார்ப்பதற்காகவே ரசிகர்களும் அலை அலையாய் திரையரங்குகளில் குவிக்கின்றனர். அதுமட்டுமல்ல உணர்ச்சி பூர்வமான வடிவேலுவின் நடிப்பு பலரையும் கண்ணீர் விட வைத்தது.
கடந்த சில வருடத்திற்கு முன்பு ரெட் கார்ட் பிரச்சனையில் சிக்கி சினிமாவை விட்டு விலகிய வைகைப்புயல், தனது செகண்ட் இன்னிங்ஸில் தன்னை நிரூபிக்க முடியாமல் துடித்துடித்துக் கொண்டிருந்த நிலையில், மாமன்னன் தான் அவருக்கு ஒரு நல்லதொரு கம்பேக்கை கொடுத்திருக்கிறது. நிச்சயம் இந்த படத்திற்கு பிறகு வடிவேலுவை தரமான படங்களில் பார்க்க வாய்ப்பு இருக்கிறது.