வியாழக்கிழமை, அக்டோபர் 17, 2024

25 வயதிலேயே உலக பணக்காரர்களை மிரள விட்ட மார்க் ஜுக்கர்பெர்க்.. வெற்றியின் பின்னால் இருக்கும் ரகசியம்

உலக பணக்காரர்கள் வரிசை கணக்கெடுப்பு என்பது பலருக்கு உத்வேகம் தரும் ஒரு லிஸ்ட். இந்த வரிசை அவ்வபோது மாற்றங்கள் கண்டாலும் இதில் பெரும்பாலும் சில நபர்களே தொடர்ந்து வருகிறார்கள். ஒருசில சமயம் இந்தியர்கள் யாரேனும் எட்டிப்பார்துவிட்டு திரும்பி விடுகிறார்கள். இவர்களது வளர்ச்சி பற்றி அறிந்துகொள்ளும்போது பல அசாத்தியமான உண்மைகள் நமக்கு தெரிகிறது. அவர்களது அர்ப்பணிப்பு, தொழில் பக்தி, புதிய முயற்சிகள், விடாமுயற்சி பற்றி அறிய முடிகிறது. அந்த வகையில் இன்று பேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ வாழ்க்கை முறை, எப்படி இவர் இவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டார்.? என்பதை பார்க்கலாம். அவர்களது வாழ்க்கையை முடிந்தவரை சுவாரசியமாக சுருக்கமாக பார்க்கலாம் வாங்க!!

மார்க் ஜுக்கர்பெர்க்: முதலில் நாம் பார்க்க இருக்கும் பணக்காரர் மார்க் ஜுக்கர்பெர்க். அனேகமாக மிக இளம்வயதில் இந்த பட்டத்தை பெற்றவர் இவராகத்தான் இருக்க கூடும். 1984ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேடித்தி பிறந்தவர் நம்ம மார்க். படிப்பில் பெரும் சுட்டி என்று கூறமுடியாவிட்டாலும் நல்லதொரு கணினி அறிவும் சந்தை பற்றிய அறிவும் பெற்றவர். சென்ற வருட இறுதியில் அவர் வசம் உள்ள சொத்துக்களின் மதிப்பு 120 பில்லியன் டாலர். இந்திய மதிப்பில் 9,11,000 கோடிகள்.

இளமை பருவம்: 3 சகோதரிகளுடன் பிறந்த மார்க் ஜுக்கர்பெர்க், சிறு வயது முதலே கணினி மீது மோகம் கொண்டிருந்தார். அவரது தந்தை ஒரு பல் மருத்துவர். அவருடைய வேலையை எளிதாக்க மார்க் ஒரு புதிய ஆப் உருவாக்கினார். அதன் மூலம் எளிதாக தனது நோயாளிகளிடம் உரையாட முடிந்தது. இந்த கண்டுபிடிப்பை உருவாக்கியபோது மார்க்கிற்கு வயது வெறும் 12. அவருடைய இந்த அறிவை உணர்ந்துகொண்ட பெற்றோர்கள், அவருக்கு கணினி சொல்லித்தர ஏற்பாடுகளை செய்தனர்.

முகநூல்: பள்ளிப்படிப்பை முடித்த மார்க், கல்லூரிப்படிப்பை பிரபலமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தொடங்கினார். கணினி மென்பொருள் வடிவமைப்பதில் கில்லாடியாக இருந்த மார்க் வெகு சீக்கிரம் கல்லூரி முழுவதும் அறியப்பட்டார். பலருக்கு கணினியில் சந்தேகங்கள், புதுப்புது தேவைகளுக்கு ஆப்கள் என்று உருவாக்கி கொடுக்க ஆரமித்தார். அப்படி தான் அவர் சக மாணவர்களுடன் உரையாடுவதற்காகவும், தங்களது விருப்பங்களை பகிர்ந்துகொள்ளவும் ஒரு வலைத்தளத்தை உருவாக்கினார். அதற்கு ஹார்வர்ட் தரப்பில் இருந்து பல எதிர்ப்புகளும் கிளம்பின. இதெல்லாம் நடந்தது 2004-ஆம் ஆண்டு. அப்போது கல்லூரியைக்கூட முடிக்கவில்லை மார்க்.

மார்க் உருவாக்கிய இந்த வலைத்தளம், கூடிய சீக்கிரமே சமூக வலைத்தளம் என்ற பெயர் பெற்றது. மேலும் அதன் சந்தை மீது கொண்டிருந்த அசாத்திய நம்பிக்கையால் மார்க் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளியேறினார். தனது பேஸ்புக்கை மெருகேற்றுவதிலேயே கவனத்தை செலுத்தினார். அதற்கு நல்லதொரு மதிப்பும் கிடைத்தது. ஆம் 2004ஆம் ஆண்டு இறுதிக்குள் 1 மில்லியன் உபயோகிப்பாளர்கள் கிடைத்தனர். இது மிகப்பெரும் வெற்றி.

மாபெரும் வெற்றி: பேஸ்புக் என்னும் தன்னுடைய இந்த ப்ராஜெக்ட்டை முழுவதுமாக முடிக்க வேண்டி அவர் சிலிக்கான் வேலி என்று சொல்லப்படும் கலிபோர்னியா சென்றார். அங்கே சிறியதொரு வீடு வாடகைக்கு எடுத்து அதை அலுவலகமாக வைத்து நடத்தினார். அவருடைய இந்த வலைத்தளத்திற்கு நல்ல மதிப்பு இருப்பது மெல்ல மெல்ல வெளி உலகத்திற்கு தெரியவந்தது. பீட்டர் தீயல் எனப்படும் உலகபணக்காரர் ஒருவர் இவர்கள் மீது நம்பிக்கை கொண்டு முதலீடு செய்தார். இதன்மூலம் அவர்களுக்கு தங்களது வலைத்தளத்தை அடுத்த அத்தியாயத்திற்கு கொண்டு செல்ல முடிந்தது.

இப்படி முகநூல் என்னும் சமூக வலைத்தளம் முன்னேற்றம் நோக்கி பயணிக்க தொடங்கியது. ஆரம்பத்தில் அவர்களது இந்த ப்ராஜெக்ட்டில் பங்குதாரர்களாக இருந்தோருடன் வழக்கு விவகாரங்களுக்குள் சிக்கவும் தப்பவில்லை. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் பேஸ்புக் தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுகிறது. தனிப்பட்ட மக்களின் ஆவணங்களை திருடுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இவை அனைத்தையும் எதிர்கொண்டார் மார்க். அந்த இளம் வயதில் இந்த அசாத்திய தைரியம் அவரை மேலும் மேலும் முன்னேற அழைத்துச்சென்றது.

பெரும் பணப்புழக்கம்: 2012ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் பங்கு வர்த்தகத்திற்கு சென்றது. அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இதன் மூலம் 16பில்லியன் டாலர்கள் கிடைத்தது, மேலும் சந்தை மதிப்பில் அதன் மதிப்பை 112பில்லியன் டாலர்கள் வரை உயர்த்தியது. இந்த அளவுக்கதிகமான பணத்தை கொண்டு மேலும் மென்பொருள், சமூக வலைதள உலகில் மிகப்பெரும் உயரத்தை தொட அவர் எண்ணினார். அதனால் 2013ஆம் ஆண்டு அவர் இன்ஸ்டாகிராம், ஒகுலஸ், அட்லாஸ் போன்ற நிறுவனங்களை வாங்கினார். இதற்கு எல்லாம் சிகரம் வைத்தது போல வாட்சாப் நிறுவனத்தையும் வாங்கினார். அதன் மதிப்பு 16பில்லியன் டாலர்கள் ஆகும்.

இத்தனை கடினங்களை தாண்டி, பல லட்சம் கொடிகளை குவித்த இந்த நிறுவனத்தின் மீது குற்றசாட்டுகள் இல்லாமல் இல்லை. இதன் மீது தனிமனித சுதந்திர மீறல், உபயோகிப்பாளர்களின் தகவல் திருட்டு, சந்தையில் மோனோபோலி ஆகும் விதம், எல்லா நிறுவனங்களையும் வளைத்துப்போடும் ஆற்றல், இந்தியாவில் எதிர்ப்பு என்று பல தடைகள். அவை அணைத்ததையும் சட்டப்படி அணுகினார் மார்க். அதில் வெற்றியும் பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை: மார்க் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு சாதாரண மனிதராகவே இருந்தார். அவர் வெளியில் செல்லும்போதெல்லாம் சாதாரண ஒரு டிஷர்ட்டும் ஜீன்ஸ் பேண்ட் மட்டுமே அணிந்திருந்தார். அவர் தனது மனைவியை ஒரு பார்ட்டியில் சந்தித்தார். அப்போதில் இருந்தே அவர் மீது காதல் கொண்டவர் பல வருடங்களாக டேட்டிங் செய்தனர். 2003ல் சந்தித்த அவரை கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து திருமணம் செய்தார். அவர்களது திருமணம் எளிமையாக அவர் வீட்டின் பின்புறம் நடந்தது. அவர்களுக்கு மெக்சிமா என்ற அழகிய பெண் குழந்தை உண்டு.

திரைப்படமாக மார்க்கின் பேஸ்புக்: மார்க் ஜுக்கர்பெர்க், முகநூல் பக்கத்தை எப்படி உருவாக்கினார், அதன் பின்னூட்ட கதை, பணத்தேவைகள், சட்டப்போராட்டம், முதலீடுகள், பிரிவினைகள், போன்றவற்றை கொண்டு ‘சோசியல் நெட்ஒர்க்’ என்னும் பெயரில் ஹாலிவுட்டில் படமாக எடுத்தார்கள். மார்க்காக ஜெஸ்ஸி ஐஸேன்பர்க் நடித்திருந்தார். உடன் ஸ்பைடர்மேன் புகழ் ஆண்ட்ரே கார்பீல்டு, ஜஸ்டின் டிம்பேர்லேக் போன்றோர் நடித்திருந்தனர். மாபெரும் வெற்றியும் பெற்றது இந்த திரைப்படம்.

மார்க் ஜுக்கர்பர்க் – ஒரே ஐடியா, ஓஹோ வாழ்க்கை!

- Advertisement -spot_img

Trending News