அருண் விஜய்க்கு திருப்பு முனையை ஏற்படுத்திய 5 படங்கள்.. நெகட்டிவ் ரோலில் கொடுத்த ரீ என்ட்ரி

நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய் 90 காலகட்டத்தில் இருந்து சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிப்பதற்கு போராடி வருகிறார். அந்த வகையில் இவர் கடின உழைப்பை கொட்டி திரைப்படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இதனால் சில வருடங்கள் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த இவர் தற்போது பல அதிரடியான திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன் அடிப்படையில் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய ஐந்து திரைப்படங்களை பற்றி இங்கு காண்போம்.

தடையற தாக்க: மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய், மம்தா மோகன் தாஸ் நடித்திருந்த இந்த திரைப்படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாகும். விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்ற இந்த திரைப்படம் அருண் விஜய்க்கு நல்ல பெயரையும் பெற்றுக் கொடுத்தது.

என்னை அறிந்தால்: கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், திரிஷா நடித்திருந்த இந்த படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்திருப்பார். இந்தப் படத்திற்கு முன் அவர் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தது. கிட்டத்தட்ட மூன்று வருட இடைவெளிக்கு பிறகு அவர் வில்லனாக ரீ என்ட்ரி கொடுத்த இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

செக்கச் சிவந்த வானம்: மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிம்பு, ஜோதிகா, அரவிந்த்சாமி, அருண் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் அருண் விஜய்யின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இப்படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

தடம்: மகிழ் திருமேனி இயக்கத்தில் க்ரைம் திரில்லர் பாணியில் உருவான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்திருப்பார். அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த அவருக்கு இப்படத்தின் மூலம் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்தது.

குற்றம் 23: ஆக்சன் திரில்லர் திரைப்படமாக வெளிவந்த இப்படத்தில் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். மிகவும் சவாலான ஒரு குற்றத்தை கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்தில் அவர் நேர்த்தியாக நடித்திருப்பார். அந்த வகையில் இப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.