தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். இவருடைய இடத்தை எப்படியாவது தட்டிப் பறிக்க வேண்டும் என்று பல இளம் நடிகைகளும் போட்டி போட்டு வருகின்றனர். அந்த வகையில் கல்லூரி மாணவி ஒருவர் நயன்தாராவை பார்த்து சினிமா ஆசையில் தன் வாழ்க்கையை தொலைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அருகில் ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் சிறு வயதிலிருந்தே எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்தபோது பேஸ்புக்கில் ஒரு அறிவிப்பை பார்த்தேன்.
அதில் டி என் 41 என்ற படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு அழகான பெண்கள் தேவை என்று போடப்பட்டிருந்தது. அதனால் நான் அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினேன். அதில் பேசிய நபர் என்னை பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள ஒரு விடுதிக்கு வரச்சொன்னார்.
நானும் சினிமா ஆசையில் அங்கு சென்றேன். அப்போது கரூர் நல்லியம்பாளயத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவர் தன்னை சினிமா தயாரிப்பாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பிறகு அவர் அங்கு வந்திருந்த பெண்களை அறைக்குள் அழைத்து பேசினார்.
இறுதியாக என்னை அழைத்த அவர் எனக்கு குடிப்பதற்கு ஜூஸ் கொடுத்தார். அதை குடித்த சில நிமிடங்களிலேயே நான் மயங்கி விட்டேன். அதன் பிறகு அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். சுயநினைவு வந்து நான் கேட்டபோது என்னை அவர் திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்தார்.
அதன் பிறகு பலமுறை அவர் என்னை சினிமா ஆசை காட்டி மோசம் செய்தார். அதன் விளைவால் கருத்தரித்த எனக்கு மாத்திரை கொடுத்து கருக்கலைப்பும் செய்தார். பின்னர் என்னிடம் பேசுவதை தவிர்த்து விட்டார். சினிமாவில் நயன்தாரா போன்று ஹீரோயின் ஆக மாற்றுவேன் என்றும், திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறி அவர் என்னை ஏமாற்றி விட்டார். இதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் புகார் அளித்துள்ளார்.
இதை அடுத்து பார்த்திபனை தற்போது போலீசார் தேடி வருகின்றனர். சினிமாவை பார்த்து ஆசைப்பட்டு தற்போது மொத்த வாழ்க்கையையும் இழந்த நிலையில் அந்தப் பெண் கொடுத்திருக்கும் புகார் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.