விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிகளில் மிக முக்கியமானது. பிரபலம் இல்லாத நட்சத்திரங்கள் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் ஓவர் நைட்டில் பிரபலமாகிவிடலாம். அதனாலேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக வந்தவர் தான் மேடை நாடகக் கலைஞர் தாமரைச்செல்வி. மிகவும் வெள்ளந்தியான இவர் அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால் போகப் போக விளையாட்டின் அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக் கொண்ட இவர் மிகவும் புத்திசாலித்தனமாக விளையாடி அனைவரையும் கவர்ந்தார்.
இவர் இறுதிப் போட்டிக்கு கட்டாயம் செல்வார் என்று நினைத்த வேளையில் திடீரென எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் அதற்கு அடுத்து தொடங்கப்பட்ட பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளராக இவர் கலந்து கொண்டார்.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வந்த தாமரை விஜய் டிவியில் நடந்த நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தன் திறமையை நிரூபித்தார். இந்நிலையில் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் சினிமாவில் நடிக்கிறேன் என்று கூறி ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் நடிக்கும் படத்தில் ரோபோ சங்கருக்கு ஜோடியாக நடிக்கிறாரா என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் இன்னும் எந்த வாய்ப்பும் கிடைக்காமல் சோசியல் மீடியாவில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்படி இருக்கும்போது தாமரைக்கு கிடைத்த இந்த வாய்ப்பு அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதுபோல் இன்னும் அவர் நிறைய படங்களை நடித்து சாதிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.