சினிமா துறையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறி தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் அஜித். ஆரம்ப காலத்தில் இவர் ஜெயிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கும் போது திரை துறையினர் யாரும் அவருக்கு பெரிதாக உதவுவதற்கு முன்வரவில்லை. தன்னுடைய கடின உழைப்பால் முன்னுக்கு வந்த அவர் தற்போது அசைக்க முடியாத ஒரு இடத்தை பெற்றுள்ளார்.
ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும் அஜித் தற்போது தனிமையை தான் முற்றிலும் விரும்புகிறார். எக்காரணம் கொண்டும் அவர் மீடியாவிற்கு முன் வருவதே கிடையாது. அவ்வளவு ஏன் தன்னுடைய படங்களின் இசை வெளியீட்டு விழா, ப்ரோமோஷன் உள்ளிட்ட எந்த நிகழ்விலும் அவர் பங்கேற்பது கிடையாது.
இந்த அளவுக்கு அவர் ஒட்டு மொத்தமாக மீடியாவை விட்டு ஒதுங்கி இருப்பதற்கு பின்வரும் காரணங்கள் தான் சொல்லப்படுகின்றன. அதாவது ஆரம்ப காலகட்டத்தில் அஜித் பத்திரிக்கையாளர்களிடமும், மீடியாவிடமும் சுமூகமாக தான் இருந்திருக்கிறார். ஆனால் அப்போது அவர் பேட்டி கொடுக்கும் போது சில நேரங்களில் லூஸ் டாக் விட்டிருக்கிறார்.
எதார்த்தமாக அவர் பேசிய சில விஷயங்கள் கூட மீடியாக்களில் பல்வேறு விதமாக திரித்து காட்டப்பட்டிருக்கிறது. இதனால் அவரை ஒரு ஆணவக்காரர் என்ற ரீதியில் பல பேச்சுகள் அந்த சமயத்தில் கிளம்பியது. இதுதான் அவர் மீடியாவை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகியதற்கு முக்கிய காரணம். அது மட்டுமல்லாமல் சில சமயங்களில் இவர் கூறும் கருத்துக்கள் கூட அரசியல் விஷயங்களோடு சம்பந்தப்படுத்தி வெளியானது.
இப்படி அஜித் கூறிய விஷயங்கள் அவருக்கு எதிராக திரும்பியது. அப்படித்தான் ஒருமுறை கலைஞருக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜித்தை கட்டாயப்படுத்தி அழைத்து இருக்கின்றனர். அப்போது அவர் மேடையிலேயே கலைஞரிடம் நடிகர்களை கட்டாயப்படுத்தி இதுபோன்ற நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று மிரட்டுகிறார்கள் என தைரியமாக பேசினார். இப்படி ஒரு விஷயத்தை பல நடிகர்களும் பேச தயங்கிய நிலையில் அஜித்தின் தைரியத்தை பார்த்து சூப்பர் ஸ்டாரே பாராட்டினார்.
ஆனால் அந்த விஷயமும் அவருக்கு எதிராக கருத்துக்களை பரப்ப வைத்தது. அப்போது ரஜினி கூட அவரிடம் மீடியாக்களில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருங்கள் என்று அறிவுரை வழங்கி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் அவர் எங்கேயாவது பொது இடத்திற்கு வந்துவிட்டால் கட்டுக்கடங்காமல் ரசிகர்கள் கூட்டமும் அவரை சுற்றி வளைத்து விடுகிறது. இப்படிப்பட்ட காரணங்களால் தான் அஜித் மீடியாவை விட்டு விலகி இருக்கிறார். சொல்லப்போனால் அவர் இப்படி தனிமையை தேடி ஓடுவதற்கு மீடியாக்களும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.