கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடியா இருக்கே.. விக்ரமுக்கு தங்கலான் படத்தால் வந்த திடீர் சிக்கல்

விக்ரம் இப்போது தங்கலான் திரைப்படத்தில் முழுமூச்சாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்திற்காக அவர் நிறைய விஷயங்களில் கஷ்டப்பட்டு நடித்து வருகிறாராம். பா ரஞ்சித் இயக்கும் இந்த திரைப்படம் கோலார் தங்க சுரங்கத்தில் பல வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இதை மையப்படுத்தி கே ஜி எஃப் என்ற திரைப்படம் வெளிவந்திருந்தாலும் அதில் சொல்லப்படாத பல உண்மைகள் இந்த படத்தின் மூலம் வெளிவர இருக்கிறது. இதனாலேயே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது அதிகமாகி உள்ளது. இந்நிலையில் தங்கலான் திரைப்படத்திற்கு இப்போது புதிதாக ஒரு சிக்கல் முளைத்துள்ளது.

அதாவது தொடர்ந்து விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட இப்போது பல மடங்கு உயர்ந்துள்ளதாம். இப்படி நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போகும் பட்ஜெட்டை பார்த்து மிரண்ட தயாரிப்பு தரப்பு தற்போது தங்களிடம் பணம் இல்லை என்று ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளது. இதனால் அதிர்ந்து போன ரஞ்சித் தற்போது தன்னுடைய கைகாசை போட்டு படத்தை முடித்து விடும் முனைப்பில் இருக்கிறாராம்.

மேலும் இந்த விவகாரத்தில் பா ரஞ்சித் மற்றும் ஞானவேல் ராஜா இருவருக்கும் ஒரு பனிப்போரே நடந்து வருகிறதாம். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை பா ரஞ்சித்துடன் இணைந்து தயாரித்து வருவது அனைவருக்கும் தெரியும். இப்படத்துடன் அவர் சூர்யா 42 திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். அதனாலேயே இப்படத்தின் அதிகப்படியான பட்ஜெட்டை அவரால் சமாளிக்க முடியவில்லை.

அதன் காரணமாகவே இப்போது ரஞ்சித்துடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. கூடிய விரைவிலேயே இவர்களுடைய இந்த மோதல் வெளிச்சத்திற்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதனால் தற்போது அதிக மன உளைச்சலில் இருப்பது விக்ரம் தான். ஏனென்றால் கடந்த வருடம் அவர் நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றாலும் அவர் மிகவும் எதிர்பார்த்த கோப்ரா திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெளிவந்த அந்த திரைப்படம் 40 கோடி வரை மட்டுமே வசூலித்து பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இத்தனைக்கும் அப்படத்திற்காக விக்ரம் கடுமையாக உழைத்து இருந்தார். ஆனாலும் அப்படம் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது. அதன் காரணமாகவே விக்ரம் தங்கலான் திரைப்படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார். ஆனால் இப்போது படத்தில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் அவருக்கு மன அழுத்தத்தை கொடுத்துள்ளது. இவ்வாறு கால் வைக்கிற இடம் எல்லாம் கன்னி வெடி தான் என்ற ரீதியில் உள்ளது விக்ரமின் நிலை.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →