பெரிய இவளா அவ என்று ஜெயலலிதாவை பார்த்து கேட்ட நடிகர் திலகம்.. பல வருடம் கழித்து உண்மையை உளறிய நடிகை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்திய அரசியலில் இரும்பு மனுஷி என்று பல அரசியல் தலைவர்களால் சொல்லப்பட்டது. அரசியல் என்பதையும் தாண்டி அவருடைய இளமை காலங்களை திரும்பி பார்த்தால் ஜெயலலிதா ஒரு சிறந்த நடிகை. தன்னுடைய 15வது வயதிலேயே சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்து விட்டார்.

ஜெயலலிதா அரசியலுக்குள் வந்தது எப்படி தனக்கு விருப்பம் இல்லாமல் நடந்த ஒன்று என்று சொன்னாரோ, அதேபோலத்தான் அவர் சினிமாவுக்குள் வந்தது. நன்றாக படிக்கும் மாணவி, படிப்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்த நேரத்தில் அவருடைய தாய் நடிகை சந்தியாவின் வற்புறுத்தலால் சினிமாவுக்குள் வந்தவர் தான் ஜெயலலிதா.

ரொம்ப சின்ன வயதிலேயே சினிமாவுக்கு வந்து விட்டதால் பெரும்பாலும் அவருடன் ஜோடி சேர்ந்த அத்தனை ஹீரோக்களும் அவரை விட வயதில் பெரியவர்களாக இருந்தார்கள். 1965இல் வெண்ணிற ஆடை என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் ஜெயலலிதா. அடுத்த ஆண்டு அவருக்கு சிவாஜி கணேசனின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

1966 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான திரைப்படம் மோட்டார் சுந்தரம் பிள்ளை. இந்தப் படத்தில் ஜெயலலிதா நடித்திருந்தார். முதல் முறை செட்டுக்குள் சிவாஜி நுழையும் பொழுது ஜெயலலிதா கால் மேல் கால் போட்டுக் கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தாராம். அதைப் பார்த்து சிவாஜி கண்டுகொள்ளாமல் சென்று விட்டாராம்.

பின்னர் நடிகை குட்டி பத்மினியிடம் சென்று என்ன பெரிய இவளா அவ, என்னை பார்த்து எப்படி உட்கார்ந்து இருக்கிறா என்று சொன்னாராம். அதற்கு குட்டி பத்மினி அவங்க அப்படித்தான், எப்பொழுதும் புத்தகம் தான் படித்துக் கொண்டிருப்பார்கள் என்று சொல்லி சிவாஜியின் கோபத்தை சமாதானப்படுத்தினாராம்.

அதன் பின்னர் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் நேரத்தில் ஜெயலலிதாவை அழைத்து நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அறிமுகப்படுத்திய போது, ரொம்பவும் மரியாதையாக பேசினாராம் ஜெயலலிதா. அப்போதுதான் சிவாஜி ஜெயலலிதாவை பற்றி நினைத்தது தவறு என்று நினைத்துக் கொண்டாராம். இந்த சம்பவத்தை நடிகை குட்டி பத்மினி சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.