இசைஞானி இளையராஜா இந்திய இசை உலகின் நம்பர் ஒன் இசையமைப்பாளராக இருப்பவர். இசையை வேறொரு பரிமாணத்திற்கு கொண்டு சென்றதில் இவருடைய பங்கு அதிகம் உண்டு. கோலிவுட் சினிமாவையே இளையராஜாவுக்கு முன், இளையராஜாவுக்கு பின் என பிரித்து விடலாம். இவருடைய இசைக்காகவே ஓடிய படங்களும் உண்டு.
ஆனால் இவருக்கு எந்த அளவுக்கு இசை திறமை இருக்கிறதோ அதைவிட பல மடங்கு தலைக்கனமும் அதிகம். சமீப காலமாகவே இவருடைய நடவடிக்கைகள் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே இவருக்கு நிறைய இயக்குனர்களுடனும், பாடலாசிரியர்களுடனும் கருத்து மோதல் நடந்திருக்கிறது. அதில் சில இயக்குனர்கள் இவர் வேண்டவே வேண்டாம் என்று முடிவு கட்டி முழுக்கு போட்டு விட்டனர்.
கே. பாலச்சந்தர்: இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் மற்றும் இசைஞானி இளையராஜா இருவரும் புது புது அர்த்தங்கள் என்னும் படத்தின் மூலம் இணைந்தனர். அதே நேரத்தில் கமல் மற்றும் ரஜினிகாந்தின் படங்களின் வேலைகளும் இருந்ததால் இளையராஜா அவர்களின் படங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து அதை முதலில் முடித்துக் கொடுத்தால் இதனால் கோபமடைந்த பாலச்சந்தர் அதன் பின்னர் இளையராஜாவுடன் இணையவே இல்லை.
பாரதிராஜா: இசைஞானி இளையராஜாவும், இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் சினிமாவில் வருவதற்கு முன்பே நல்ல நண்பர்கள். நிறைய படங்கள் இணைந்து பணியாற்றிய இவர்களுக்குள் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். பல வருடங்களாக இவர்கள் பேசிக் கொள்ளவும் இல்லை. அதன் பின்னர் ஒரு பொது மேடையில் இருவரும் ரொம்பவும் நட்புடன் பேசிக்கொண்டனர். சமீபத்தில் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கூட இளையராஜா அவரை நேரில் சந்தித்தார்.
மணிரத்தினம்: இயக்குனர் மணிரத்தினம் மற்றும் இளையராஜா பல படங்களில் இணைந்து பணி புரிந்தனர். இவர்களுடைய கூட்டணியில் தளபதி படத்தில் வெளியான அத்தனை பாடல்களுமே இன்று வரை ரசிகர்களை கிரங்கடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த படத்தின் சமயத்திலேயே இருவரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். அதன் பின்னர் உருவானது தான் மணிரத்தினம், ஏ ஆர் ரகுமான் கூட்டணி.
பாக்யராஜ்: பாக்யராஜின் சின்ன வீடு திரைப்படம் வரையும் இளையராஜா தான் அவருக்கு இசையமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதுவரைக்கும் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என இருந்த பாக்யராஜ் இது நம்ம ஆளு திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் மாறினார். அதில் வெற்றியும் கண்டார்.