ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி, பாரதிராஜா, ஆத்மிகா ஆகியோர் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் திருவின் குரல். அரசு மருத்துவமனையில் நடக்கும் அட்டூழியங்களை வேறு ஒரு கோணத்தில் சொல்லி இருக்கும் இப்படத்தின் முழு விமர்சனத்தை இங்கு விரிவாக காண்போம்.
மருத்துவமனையில் நடக்கும் பல குற்ற செயல்கள் பற்றி ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது. அதில் இப்படம் சற்று வேறுபட்டு காணப்படுகிறது. அதாவது மருத்துவமனையில் பணிபுரியும் கடை நிலை ஊழியர்கள் பற்றிய வேறொரு பிம்பத்தை இப்படம் காட்டி இருக்கிறது. இப்படியும் கூட இருக்கிறார்களா என்ற ஒரு பதைபதைப்பையும் நமக்கு உருவாக்கி இருக்கிறது.
கதைப்படி வாய் பேச முடியாதவராக இருக்கும் அருள்நிதிக்கு அருகில் வந்து பேசினால் மட்டும் ஓரளவுக்கு காது கேட்கும். தன் அப்பா பாரதிராஜாவுடன் கன்ஸ்ட்ரக்சன் வேளையில் உதவியாக இருக்கும் அவர் கொஞ்சம் கோபக்காரர். ஒரு சந்தர்ப்பத்தில் பாரதிராஜாவுக்கு விபத்து ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
அப்போது அருள்நிதியின் அக்கா மகள் எதிர்பாராத ஒரு விஷயத்தை பார்க்கிறார். அதன் காரணமாக அவருக்கு மருத்துவமனையில் வேலை செய்யும் லிப்ட் ஊழியர், வார்ட் பாய், மார்ச்சுவரியில் இருப்பவர் ஆகியோருடன் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் பாரதிராஜாவுக்கு தவறான ஒரு ஊசியை போட்டு விடுகின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது, அருள்நிதிக்கும், கடைநிலை ஊழியர்களுக்கும் என்ன பிரச்சனை, இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் முழு கதை.
சென்டிமென்ட், ஆக்சன் என கலந்து கொடுத்திருக்கும் இயக்குனர் யாரும் யோசிக்காத ஒரு விஷயத்தை காட்டி இருக்கிறார். அதிலும் கடைநிலை ஊழியர்களாக வருபவர்கள் செய்யும் அக்கிரமங்களும், அட்டூழியங்களும் ஒரு பயத்தையே கொடுக்கிறது. இப்படத்தை பார்த்துவிட்டு அரசு மருத்துவமனை செல்பவர்கள் நிச்சயம் ஒரு பீதியுடன் தான் போவார்கள். அந்த அளவுக்கு படத்தில் வரும் காட்சிகள் நம்மை மிரட்டி இருக்கிறது.
அதிலும் லிப்ட் ஊழியராக வரும் அஷ்ரப் வில்லத்தனத்தின் மொத்த உருவமாய் நிற்கிறார். அதனாலேயே அவரை பார்க்கும் போது நமக்கு பற்றி கொண்டு வருகிறது. அதைத்தொடர்ந்து நடித்திருக்கும் மற்ற வில்லன்களும் கோபத்தை வரவழைக்கின்றனர். இப்படி கச்சிதமாக நகரும் கதையில் அருள்நிதி தன் எதார்த்த நடிப்பின் மூலம் உயர்ந்து நிற்கிறார். எப்போதுமே தன்னுடைய கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் அவர் இப்படத்தில் வாய் பேச முடியாதவராக அசத்தியிருக்கிறார்.
அதை தொடர்ந்து பாரதிராஜாவை பார்க்கும் போது ஒரு பரிதாபமே ஏற்படுகிறது. அந்த அளவுக்கு ஒரு அப்பாவாக அவர் கவனம் பெறுகிறார். மற்றபடி ஹீரோயினுக்கு படத்தில் பெரிய வேலை கிடையாது. மேலும் சில லாஜிக் மீறல்கள் ஒரு குழப்பத்தை கொடுக்கிறது. அதில் கொஞ்சம் இயக்குனர் சறுக்கி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஆக மொத்தம் இந்த திருவின் குரல் சொல்லி இருக்கும் விஷயம் சத்தம் குறைவாக இருப்பதால் கேட்கவில்லை.