சினிமாவில் சில நடிகர், நடிகைகளுக்கு மட்டும் எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான கேரக்டர்களே கிடைக்கும். உதாரணத்திற்கு ஒரு படத்தில் போலீசாக நடித்தவர் அதற்கு அடுத்து நிறைய படங்களில் போலீஸ் கேரக்டரில் தான் வருவார். அதே போன்று முன்னணி நடிகர்களுக்கு கூட கிடைத்த கேரக்டரே அடுத்தடுத்து வெவ்வேறு படங்களில் அப்படியே கிடைக்கும். இதனால் ரிப்பீட் மோடில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளும் உண்டு.
கார்த்திக்: பிரபல பின்னணி பாடகியான சுசித்ராவின் முன்னாள் கணவர் இவர். பெரும்பாலும் இவருக்கு ஹீரோயினை காதலித்து, திருமணம் வரை சென்று பின்னர் ஹீரோக்களுக்கு விட்டுக் கொடுக்கும் கதாபாத்திரம் தான் கிடைக்கும். அலைபாயுதே படத்தில் ஷாலினி, கண்ட நாள் முதல் படத்தில் லைலா, யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாரா என அந்தந்த படங்களில் இந்த ஹீரோயின்கள் இவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணாக இருந்து, அதன் பின்னர் ஹீரோக்களை திருமணம் செய்து கொள்வார்கள்.
சோனியா அகர்வால்: நடிகை சோனியா அகர்வால் எல்லா படங்களிலும் ரொம்பவும் கம்பீரமான மற்றும் தைரியமான நாயகியாக வருவார். வழக்கமான ஹீரோயின்களை போல் குழந்தைத்தனமாக நடிக்காமல் இவர் நடித்த அத்தனை படங்களிலும் அவருக்கான தோரணை கண்டிப்பாக இருக்கும். பெரும்பாலும் ஹீரோக்களை திருத்தும் ஹீரோயின் ஆக தான் வருவார். 7ஜி ரெயின்போ காலனி கதிர், காதல் கொண்டேன் திரைப்படத்தின் வினோத் போன்ற ஹீரோக்களை திருத்துவது தான் பெரும்பாலும் இவரது வேலையாக இருக்கும்.
லைலா: பெரும்பாலும் எல்லா படங்களிலும் ரொம்பவும் சுட்டித்தனமாக நடிக்க கூடியவர் லைலா. இவர் அதிகமாக சீரியஸ் கேரக்டர்கள் பண்ணியதில்லை. அதே போல் நடித்த நிறைய படங்களில் ஹீரோக்களுடன் இவர் சேர்ந்ததும் இல்லை. நந்தா, காமராசு, பிதாமகன், உன்னை நினைத்து போன்ற படங்கள் இதற்கு உதாரணம்.
விக்ரம்: சீயான் விக்ரம் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ரிலீசுக்கு பிறகு தான் நெட்டிசன்களால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். இதற்கு காரணம் மணிரத்தினம் தான். விக்ரம், ஐஸ்வர்யா ராய் உடன் முதலில் இணைந்து நடித்த ராவணன் திரைப்படத்திலும் அவர் வேறு ஒருவரின் மனைவியாக இருப்பார், ஆனால் விக்ரம் அவரை காதலிப்பார். அதேபோன்று பொன்னியின் செல்வனில் விக்ரம் ஐஸ்வர்யாவை காதலித்தும் சந்தர்ப்ப சூழ்நிலையால் சரத்குமாரை திருமணம் செய்து கொள்வார். ஆனால் விக்ரமால் அவரை மறக்க முடியாது.
ஐஸ்வர்யா ராஜேஷ்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் கிட்டத்தட்ட லைலாவின் நிலைமைதான். அவரும் பெரும்பாலான படங்களில் அவர் காதலித்த ஹீரோவுடன் சேரவே மாட்டார். ரம்மி படத்தில் விஜய் சேதுபதியை திருமணம் செய்த பிறகு அவருடைய வீட்டை சேர்ந்தவர்கள் விஜய் சேதுபதியை கொலை செய்து விடுவார்கள். அதே போன்று தர்மதுரை திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்த பிறகு அவர் தற்கொலை செய்து கொள்வார்.