தமிழ் திரையுலகம் இன்று பெரும் இழப்பை சந்தித்துள்ளது. இயக்குனரும், நடிகருமான மனோபாலா இன்று உடல் நலக்குறைவால் மரணமடைந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்களும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் மனோபாலாவின் நினைவுகளை ஒவ்வொருவரும் நினைவுகூர்ந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் ரஜினியின் நண்பரும், நடிகருமான சரத்பாபு உயிரிழந்து விட்டதாக ஒரு தகவல் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பலரும் அவருடைய ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என தெரிவித்து வந்தனர்.
ஆனால் உண்மையில் சரத்பாபு நலமுடன் தான் இருக்கிறாராம். தேவையற்ற இது போன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று அவருடைய குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். அந்த வகையில் சரத்பாபு கடந்த சில வாரங்களாகவே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும் அவருடைய உடல் உறுப்புகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவர் அபாய கட்டத்தில் இருப்பதாக சில நாட்களுக்கு முன்பிருந்தே ஒரு தகவல் வெளியாகி பலருக்கும் ஷாக் கொடுத்தது.
அதைத்தொடர்ந்து சரத்பாபு பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் ஆண்டவனை பிரார்த்தனை செய்து வந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் இறந்து விட்டதாக கிளம்பியுள்ள புரளி பலரையும் உலுக்கி எடுத்துள்ளது. ஏற்கனவே மனோபாலாவின் இறப்பு பலரின் மனதையும் கனக்கச் செய்துள்ளது. இந்நிலையில் யார் இந்த தேவையற்ற வதந்தியை பரப்பியது என பலரும் ஆதங்கத்துடன் கேட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சரத்பாபுவின் உடல்நலம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருவதாகவும், விரைவில் அவர் குணமடைந்து விடுவார் என்றும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது கிளம்பிய இந்த வதந்தி திரையுலகையே கொஞ்ச நேரம் பதற வைத்து விட்டது. சரத்பாபு இறந்தது போன்ற செய்தி ரஜினிகாந்த் காது வரை சென்று அதிர்ச்சி அடைந்துள்ளார். இது போன்ற புரளிகளை கிளப்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.