உலக பட்டினி தினத்திற்கு தளபதி செய்யப் போகும் சம்பவம்.. தமிழ்நாட்டைத் தாண்டி வேலை செய்யும் அரசியல்

விஜய்யின் படங்கள் என்றாலே எதிர்பார்ப்பிற்கு பஞ்சமில்லை. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கையான பெயரை சம்பாதித்து மக்கள் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடித்து வருகிறார். மேலும் தற்பொழுது மக்கள் நலம் கருதி இவர் செய்ய இருக்கும் சம்பவம் வரவேற்கக் கூடிய ஒன்றாக இருந்து வருகிறது.

தனி ஒருவருக்கு உணவு இல்லை என்றால் இஜ்ஜகத்தினை அழித்திடுவோம் என்னும் கூற்றுக்கு ஏற்ப உலகில் பட்டினி என்பதே இருக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு அனுசாரிக்கப்படுவது தான் உலக பட்டினி தினம். அவ்வாறு உலகம் முழுவதும் மே 28 ஆம் தேதி அன்று உலக பட்டினி தினமாக கொண்டாடப்படுகிறது.

மேலும் இத்தகைய தினம் உலக அளவில் நீண்ட காலம் பட்டினியால் வாழும் மக்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இவை மாபெரும் தலைவர்களால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தளபதி அவர்களின் சொல்லிக்கிணங்க உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு பசி என்னும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் வருகின்ற 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் 11 மணி அளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பயன்பெறும் வகையில் ஒரு வேலை மதிய உணவு வழங்க திட்டமிட்டு இருக்கிறார் விஜய்.

பொதுநலம் கருதி இவர் மேற்கொள்ளும் முயற்சியை தொடர்ந்து தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் இவரின் இயக்கத்தின் சார்பில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இவரின் இத்தகைய செயல்கள் தன்னை அரசியலுக்குள் அர்ப்பணித்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுத்தும் விதமாக இருந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து பசியால் வாழும் மக்களுக்கு இயன்றவரை உணவளித்து, பசியை போக்கும் விழிப்புணர்வினை சமுதாயத்தில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நலப்பணி என்றும் எப்பொழுதும் செயல்படும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார் விஜய். மேலும் இத்தகைய செயலால் தன்னை மேம்படுத்தி கொண்டு மக்களிடையே நம்பிக்கையின் பாத்திரமாக இருப்பார் என நம்பப்படுகிறது.