மணிரத்னம் படத்தில் நடித்ததால் கொண்டாடப்பட்ட 5 நடிகைகள்

தனக்கே உரித்தான பாணியில் நீண்ட டயலாக் இல்லாமல் தத்ரூபமான கதைக்களத்தில் படங்களை இயக்குவதில் கெட்டிக்காரர் இயக்குனர் மணிரத்தினம். இவருடைய படங்களில் ஒரு தடவையாவது நடித்து விட மாட்டோமா என டாப் நடிகர்கள் பலரும் தவமாய் தவம் இருக்கின்றனர். அதிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஐந்து நடிகைகள் இவர் படத்தில் நடித்ததால் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்கள்.

ரேவதி: குடும்ப குத்துவிளக்கான கேரக்டர்களிலும் சரி, மாடல் லுக்கிலும் சரி மிக எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டக் கூடியவர்தான் நடிகை ரேவதி. இவர் மண்வாசனை என்ற படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமாகி, அதன்பின் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌன ராகம் என்ற படத்தின் மூலம் தான் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் கிடைத்தது.

இதில் திவ்யா என்ற கேரக்டரில் முதலில் கார்த்திக்கை காதலித்து, அவர் திடீரென இறந்துவிட பின் குடும்ப சூழ்நிலையின் காரணமாக மோகனை திருமணம் செய்து கொள்வார். ஆனால் இவரால் அவ்வளவு சீக்கிரம் காதலனை மறக்க முடியாமல் கணவரையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் அவர் படும் பாடு பார்ப்போரைக் கண்கலங்க வைத்தது. இந்த கேரக்டரில் ரேவதி மிகப் பொருத்தமாகவே நடித்து படத்தின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தார்.

ஷோபனா: சுமார் 230 படங்களுக்கு மேல் நடித்த ஷோபனா 80, 90களில் முன்னணி நடிகையாக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தார். இவர் மிகச்சிறந்த பரதநாட்டிய நடனக் கலைஞர் என்பதால் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தில் சுப்புலட்சுமி என்ற கேரக்டருக்கு மிகச்சரியாக பொருந்தி நடித்திருப்பார். அந்த காலகட்டத்தில் இளசுகளிடம் எந்த மாதிரியான பொண்ணு வேண்டும் என கேட்டால் சட்டென்று தளபதி படத்தில் இடம்பெற்ற ‘யமுனை ஆற்றிலே’ என்ற பாடலில் வரும் ஷோபனாவை தான் கை காட்டுவார்கள். இந்த படத்தில் இவர் அவ்வளவு நளினத்தோடு நடத்ததால் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவரானார்.

மதுபாலா: மலையாளம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்த மதுபாலாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்று தந்தது மணிரத்தினத்தின் ரோஜா படம் தான். இந்த படத்தில் நடித்த பிறகுதான் அவருடைய மார்க்கெட் டாப் கீரில் எகிறியது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது. அது மட்டுமல்ல தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமான ஹீரோயினாகவும் மாறினார்.

ஷாலினி: சுமார் 90 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் ஷாலினி, குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி அதன் பிறகு கதாநாயகியாக மலையாள படத்தில் தான் முதன்முதலில் என்ட்ரி கொடுத்தார். அதன் பின் தமிழுக்கு விஜய் உடன் காதலுக்கு மரியாதை என்ற படத்தில் தோன்றிய ஷாலினி, அமர்க்களம் படத்தின் மூலம் அஜித்தை காதலிக்க துவங்கினார். அதன் பின் மணிரத்னம் இயக்கத்தில் சக்தி என்ற கேரக்டரில் அலைபாயுதே படத்தில் நடித்த ஷாலினி தான் ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயின்.

ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த படத்தில் மிக எதார்த்தமான பெண்ணாகவே வாழ்ந்திருப்பார். இந்த படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் சிறப்பு பரிசும் கிடைத்தது. திருமணத்திற்கு பிறகு தற்போது நடிப்பதை நிறுத்திவிட்ட ஷாலினி, தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவர் நடித்த படங்கள் எப்போது தொலைக்காட்சியில் போட்டாலும் அதை தவறாமல் பார்ப்பார்கள். அதிலும் அலைபாயுதே படம் தான் அவர்களின் ஃபேவரைட் படம்.

நித்யா மேனன்: ஸ்லிம்மாக இருப்பது தான் கதாநாயகிகளுக்கு அழகு என்பதை உடைத்தெறிந்தவர் தான் நித்யா மேனன். கொழுக்கு முழுக்குன்னு பெங்களூரு தக்காளி போல் இருக்கும் நித்யா மேனன் 2015 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரொமான்டிக் காதல் திரைப்படமான ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இதில் இவர்களது இருவரின் கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆகி இருக்கும்.

இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை காட்டி இருப்பார்கள். இது அந்த காலத்தில் இருப்பவர்களுக்கு பிடிக்காவிட்டாலும் தற்போது நடைமுறையில் என்ன ரியாலிட்டி என்பதை மணிரத்தினம் இந்த படத்தில் காட்டி இருப்பார். இதில் தாராவாக நடித்திருக்கும் நித்யா மேனன், இந்த படத்திற்கு பிறகு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கதாநாயகியாக மாறினார்.

இவ்வாறு இந்த ஐந்து நடிகைகள் தான் மணிரத்தினத்தின் படத்தில் நடித்த ஒரே காரணத்திற்காக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகைகள். அதிலும் அலைபாயுதே படத்தில் சக்தியாக நடித்த பிறகு ஷாலினி தான் ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயின் ஆக மாறினார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →