Bigg Boss Celebrities: ஓவர் நைட்டில் ஒபாமாகிவிடலாம் என்பது போல், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் பிரபலமாகிவிடலாம் என்பது நிதர்சனமான உண்மை. அப்படி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று ஃபேமஸ் ஆகி இருந்தாலும் அவர்களால் வெளியில் வந்த பிறகு எதையும் பண்ண முடியாமல் வெட்டியாக தான் திரிகிறார்கள். அவர்களைப் பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.
ஆரவ்: இவர் பிக் பாஸ் சீசன் முதல் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரையும் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் வெற்றியாளராக வந்தார். இதனை அடுத்து 2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறையில் நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பின் தொடர்ந்து இரண்டு மூன்று படங்களில் நடித்து வந்த இவருக்கு எதிர்பார்த்தபடி பெரிசாக படங்கள் ஏதும் கைகொடுக்கவில்லை. ஆனால் கடந்த வருடம் வெளிவந்த கலகத்தலைவன் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. ஆனாலும் தொடர்ந்து பட வாய்ப்பு இல்லாமல் திண்டாடி கொண்டு தான் வருகிறார்.
ராஜு: இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் ஒரு சில படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியலில் நடித்து பிரபலமாகி இருக்கிறார். அதன் பின் 2021 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 5- வில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றார். ஆனாலும் அந்த ரியாலிட்டி ஷோவில் இவருடைய பங்கு பெருசாக இல்லை. இருந்தாலும் உள்ளே ஏதோ காமெடி பண்ணிக்கொண்டு ஜோக்கராக இருந்து ரசிகர்களை ரசிக்க வைத்தார். இதனை வைத்து வெளியில் இவருடைய திறமைக்கு ஏதாவது அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அது எதுவும் இல்லாமல் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டுதான் வருகிறார்.
ஆரி: இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று ரொம்ப நேர்மையாகவும், சமூக அக்கறை உள்ளவராகவும், கலாச்சாரம் மற்றும் விவசாயத்திற்கு ஆதரவளிக்க கூடியவராகவும் இவருடைய நற்பண்புகளை அனைவரது முன்னாடியும் காட்டி டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றார். இந்த புகழை வைத்துக்கொண்டு வெளியில் வந்த பிறகும் இவரை தேடி பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த மாதிரி ஒரு கேரக்டர் இருக்கிறது என்று தெரியாத படி காணாமல் போய்விட்டார்.
லாஸ்லியா: இலங்கையில் பிரபல செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். அதிலும் கவின் உடன் சேர்ந்து சுத்தி விட்டு அது மூலமாகவே பேமஸ் ஆகி விட்டார். அதன் பின் வெளியில் வந்த பிறகு அவரை டீலில் விட்டு படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் இவர் நடிக்கும் படங்கள் ஏதோ உப்புக்கு சப்பையாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
ஷெரின்: இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் நெகட்டிவான கருத்தையும் பெறாமல், அதே நேரத்தில் இவரை தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு ரசிகர்களையும் சம்பாதிக்கவில்லை. ஆனாலும் கடைசி வரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளராக பங்கு பெற்றார். அப்படிப்பட்ட இவர் வெளியில் வந்த பிறகு எங்கே போனார் என்று தடம் தெரியாமலே மறைந்து விட்டார்.
தர்ஷன்: இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு பரிச்சயமானார். அத்துடன் இவருடைய நிதானமும் தைரியமும் பார்ப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் தொகுத்து வழங்கிய கமலுக்கும் ரொம்பவே பிடித்து போயிருந்தது. அதனாலயே கமல் இவருக்கு அனைவரது முன்னாடியும் மேடையில் ஒரு வாக்கு கொடுத்தார். அதாவது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தின் மூலம் உங்களுக்கு ஒரு படம் உண்டு என்று சொல்லி இருந்தார். ஆனால் அது காற்றோடு காற்றாக போய்விட்டது.