Actor Suriya: நடிகர் சூர்யாவிற்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமல்ல அக்கட தேசத்திலும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இதனால் இன்று சூர்யாவின் 48-வது பிறந்தநாள் தினத்தை தடப்புடலாக கொண்டாட நினைத்த இரண்டு ரசிகர்களுக்கு நெஞ்சை பதிக்க வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் மோபுரிவாரிபாலன் கிராமத்தை சேர்ந்த இரண்டு பேர் நரசாராவ்பேட்டையில் சூர்யாவின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட வேண்டும் என அவருடைய பிளக்ஸ் பேனர்களை கட்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது பிளக்ஸ் பேனரில் இருந்த இரும்பு கம்பி அங்குள்ள மின்சார கம்பியில் மோதியதில் இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களுக்கு உதவி செய்த இன்னொருவரும் காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பரிதாபமாக உயிரிழந்த அந்த இரண்டு வாலிபர்களும் அங்குள்ள தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு 2ம் ஆண்டு படித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா சினிமாவில் மட்டுமல்ல சமூக நலப் பணிகளையும் செய்வதால் அவருக்கென்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் ஆந்திராவில் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தால் ஏற்பட்ட ரசிகர்களின் மரணம் தற்போது அவர்களது குடும்பத்தை மட்டுமல்ல ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை அறிந்ததும் சூர்யாவும் மிகவும் கலக்கத்தில் இருக்கிறார்.
இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஹீரோக்களை கொண்டாட வேண்டும் என ரசிகர்கள் தங்களது குடும்பத்தைக் கூட பார்க்காமல் ஆபத்தான வேலைகளை செய்து உயிரை மாய்த்துக் கொள்வது முட்டாள்தனம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.