Dhruva Natchathiram Release Postponed: பல வருடங்களாக வெளிவருமா என சந்தேகத்தை கிளப்பிய துருவ நட்சத்திரம் மீண்டும் தூசி தட்டப்பட்டது. கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், பார்த்திபன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். சீயான் ரசிகர்கள் மிகப் பெரும் ஆர்வத்துடன் இதன் ரிலீஸுக்காக காத்திருந்த நிலையில் தற்போது அது தள்ளிப் போயிருக்கிறது.
எப்படியாவது படத்தை வெளியிட்டே தீர வேண்டும் என கௌதம் மேனன் பரபரப்பாக ஒவ்வொரு வேலையையும் பார்த்து வந்தார். ஆனால் நேற்று டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படாததே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் படத்தை வெளியிட தடை போட்டது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அந்த வகையில் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தரவேண்டிய 2.40 கோடி பணத்தை கௌதம் மேனன் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இன்று காலை 10 மணிக்குள் பணத்தை தரவில்லை என்றால் படம் வெளியாக கூடாது எனவும் அறிவுறுத்தியிருந்தது.
இது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கௌதம் மேனன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விடிய விடிய பஞ்சாயத்து பேசி இருக்கிறார். ஆனாலும் அவர்கள் இறங்கி வராத நிலையில் நொந்து போன அவர் தற்போது படம் இன்று வெளியாகாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கௌதம் மேனன் இன்னும் சில தினங்களில் பிரச்சினை முடிந்து படம் உங்கள் பார்வைக்கு வரும் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் எப்படியும் இந்த பஞ்சாயத்து முடிந்து படம் வருவதற்கு ஒரு வார காலம் ஆகிவிடும் என்கிறது திரையுலக வட்டாரம். இது தான் இப்போதைய பரபரப்பு செய்தியாக மாறி இருக்கிறது.