விஜயகாந்தை படிப்படியாக செதுக்கிய ராவுத்தர்.. கேப்டனின் கோட்டை சரிய காரணமாக இருந்த இரண்டு பேர்

Vijayakanth: ஒரு நல்ல நட்பு என்ன செய்யும், தன் நண்பனை இன்பம் மற்றும் துன்பத்தில் தாங்கிப் பிடித்து தோள் கொடுக்கும். அப்படி ஒரு நல்ல நட்புக்கு உதாரணமானவர்கள் தான் கேப்டன் விஜயகாந்த் மற்றும் இப்ராஹிம் ராவுத்தர். கேப்டன் விஜயகாந்தை பற்றி தெரிந்துவர்களுக்கு, ராவுத்தரை பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அந்த அளவுக்கு நட்பின் இலக்கணமாக இருந்தவர்கள் இவர்கள் இருவரும்.

ராவுத்தர் கேப்டனுக்கு இளம் வயதிலிருந்து நெருங்கிய நண்பர். கேப்டனின் நம்பிக்கைக்கு உரிய ஒரே மனிதன். அவர் நடிக்கும் படங்களின் கதைகளை கேட்பது, அவர் எந்த படங்களில் நடிக்க வேண்டும் என இறுதி முடிவு எடுப்பது ராவுத்தர் தான். கேப்டன் சினிமாவுக்கு வந்த போது அவர் நிறைய சோதனைகளை சந்திக்க வேண்டி இருந்தது. அது அத்தனையிலும் கேப்டனுக்கு உறுதுணையாக நின்றவர் ராவுத்தர்.

கேப்டனின் ஒரு படம் தோல்வி அடைந்து விட்டால், அதற்கு அடுத்து தேடி அலைந்து கதை தேர்ந்தெடுத்து உடனே ஒரு ஹிட் கொடுத்து அவரை முன்னுக்கு கொண்டு வந்து விடுவார். ராவுத்தர் ஊரில் இல்லாத சமயத்தில் ஏவிஎம் நிறுவனம் விஜயகாந்த்திடம் ரஜினியின் முரட்டுக்காளை படத்தில் வில்லனாக நடிப்பதற்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டது. விஷயம் தெரிந்த ராவுத்தர் நீ நடித்தால் ஹீரோவாக தான் நடிக்க வேண்டும் என்று சொல்லி அந்த அட்வான்ஸை அவரே நேரில் போய் அந்த நிறுவனத்திடம் கொடுத்து விட்டு வந்து விட்டார்.

ஒருவேளை முரட்டுக்காளை படத்தில் விஜயகாந்த் வில்லனாக நடித்திருந்தால் அவருடைய சினிமா பாதை இந்த அளவுக்கு வந்திருக்காது. விஜயகாந்த் ராதிகாவை உருகி உருகி காதலித்தது உண்மை. ஆனால் அவரை திருமணம் செய்தால் விஜயகாந்த் சொந்த வாழ்க்கை சரி வராது என முடிவெடுத்து, உடனே பிரேமலதாவை பார்த்து திருமணம் செய்து வைத்து கேப்டனின் சொந்த வாழ்க்கையிலும் ஒளி ஏற்றி வைத்தது ராவுத்தர் தான்.

கேப்டன் ராவுத்தர் பிரிவு

கேப்டன் அரசியலுக்கு வந்த பிறகு இவர்கள் இருவருக்கிடையே கருத்து வேறுபாடு வந்து விட்டது. இருந்தாலும் சண்டை போட்டுக் கொண்டோ, எதிரிகளாகவோ இருவரும் பிரியவில்லை. ராவுத்தர் விலகிய பிறகு விஜயகாந்த் வாழ்க்கையில் எல்லாமே சருக்கள்தான். ராவுத்தருக்கு பிறகு அந்த இடத்தை பிரேமலதா விஜயகாந்த் அவருடைய தம்பி சுதீஷ் இடம் கொடுத்தார்.

சினிமா பற்றி எதுவுமே தெரியாத சுதீஷ் கதை கேட்க ஆரம்பித்தது தான் கேப்டனின் படங்கள் தோல்வியடைய முக்கிய காரணம். ஐயா படம் கேப்டன் விஜயகாந்த் நடிக்க வேண்டியது. ஹரியை பார்த்தால் எனக்கு நம்பிக்கை வரவில்லை, நீங்கள் அதில் நடிக்க வேண்டாம் என்று மறுத்துவிட்டார் சுதீஷ்.

கேப்டனின் அரசியல் வாழ்க்கையிலும் அடுத்தடுத்து முடிவெடுத்தது பிரேமலதா மற்றும் சதீஷ் தான். அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் அவருடைய மனைவி மற்றும் மைத்துனர் தலையிட்ட பிறகுதான் கேப்டனுக்கு தோல்வி என்ற ஒன்று நெருங்க ஆரம்பித்தது. ஒரு வேலை ராவுத்தர் கேப்டனின் அருகில் இருந்திருந்தால் கேப்டனுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்க வாய்ப்பே இல்லை.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →