மயில் போல பொண்ணு மக.. மறைந்த பாடகி பவதாரணி மீளா துயில் கொள்ளும் இடம்

Bhavatharini Passed Away: நாம் ரசித்த கலைஞர்கள் பலர் சமீபத்தில் உயிர் இழந்து இருப்பது ரொம்பவும் வருத்தத்திற்குரிய விஷயமாக இருக்கிறது. அப்படி ஒரு மறைவு தான் பின்னணி பாடகி மற்றும் இசையமைப்பாளர் பவதாரணி மரணமும். இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு பேரிழப்பாக அமைந்துவிட்டது. அவருடைய மறைவுக்கு பலதரப்பட்ட மக்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

தன்னுடைய இசையால் எத்தனையோ மக்களின் சோகங்களை தீர்த்து வைத்த இசைஞானி இளையராஜாவிற்கு தன்னுடைய மகளின் மறைவு இப்போது மீளா துயரை கொடுத்து இருக்கிறது. இளையராஜாவின் மூன்று பிள்ளைகளும் தந்தை வழியிலேயே இசையை தேர்ந்தெடுத்தவர்கள். தன்னுடைய சகோதரர்கள் அளவிற்கு வெற்றி பெறாவிட்டாலும் தன்னுடைய வித்தியாசமான குரல் வளத்தால் குரல் வளர்த்தால் பின்னணி பாடகியாக ஜொலித்தார் பவதாரணி.

ஒளியிலே தெரிவது, இது சங்கீத திருநாளோ, தாலியே தேவையில்லை, நீ இல்லை என்றால், மயில் போல பொண்ணு ஒன்னு, இந்த சிறு பெண்ணை எங்கு பார்த்தேன் போன்ற பாடல்கள் மூலம் என்றும் நம் மனதில் நிலைத்து நிற்க கூடிய பவதாரணி ஜனவரி மாதம் 25ஆம் தேதி இலங்கையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் உயிரிழந்து விட்டார். அவருடைய உடல் நேற்று தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

பவதாரணி மீளா துயில் கொள்ளும் இடம்

இந்த நிலையில் பவதாரணியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் இளையராஜாவின் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது அங்கு அவருடைய பண்ணை வீட்டில் உள்ள தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே அந்த இடத்தில் இளையராஜாவின் அம்மா மற்றும் மனைவி ஜீவாவின் சமாதி இருக்கிறது தற்போது பாட்டி மற்றும் அம்மாவின் சமாதிக்கு நடுவே பவதாரிணி மீளா துயில் கொள்கிறார்.

பித்தப்பையில் கல் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் அது புற்றுநோயாக மாறி சிறுநீரகம் வரை பரவி இருக்கிறது. இங்குள்ள மருத்துவர்கள் அனைவரும் கை விட்ட நிலையில் தான் பவதாரணி ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்று இருக்கிறார். ஆனால் அங்கு சென்ற சில நாட்களிலேயே அவர் தன்னுடைய இன்னுயிரை இழந்து இருக்கிறார்.