Vaadivaasal Update: சூர்யாவுக்கு வில்லனாகும் வடசென்னை ஹீரோ.. ரோலெக்ஸுக்கு தரமான சம்பவம் ரெடி வில்லாதி வில்லன் என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்போம். அதை சீக்கிரமே திரையில் பார்க்க இருக்கிறோம். சூர்யா காதல் ஹீரோவாகவும், அதிரடி ஆக்சன் ஹீரோவாகவும் நகைச்சுவையிலும் பட்டையை கிளப்பும் நடிகர்.
அவரை நெகட்டிவ் ரோலில் பார்க்கும் வாய்ப்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மூலம் நமக்கு கிடைத்தது. இரண்டு நிமிட காட்சி என்றாலும் தரமான சம்பவத்தை செய்திருந்தார் சூர்யா. அதைத் தொடர்ந்து தற்போது கங்குவா படத்தில் சூர்யா நடித்து கொண்டிருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் சூரரைப் போற்று பட குழுவுடன் மீண்டும் இணைந்து புறநானூறு படத்தில் பணியாற்றுகிறார். அது மட்டும் இல்லாமல் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து அவருடைய 44 ஆவது படத்தில் வேலை செய்ய இருக்கிறார்.
இது எல்லாமே அடுத்தடுத்து அப்டேட்டுகளாக வந்தாலும் சில வருடங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்ட வாடிவாசல் படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்புமே கிடையாது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யாவை பார்ப்பதற்காக அவருடைய ரசிகர்கள் ஆவலாக காத்து கிடக்கிறார்கள்.
வெற்றிமாறன் விடுதலை படத்தில் பிசியான கையோடு, சூர்யாவும் அடுத்தடுத்து படங்களில் வேலை செய்து கொண்டிருந்ததால் இந்த படத்தைப் பற்றி இரண்டு பேருமே வாயை திறக்கவில்லை. ஒரு கட்டத்தில் சூர்யா மற்றும் வெற்றிமாறன் இரண்டு பேரும் இணைவார்களா, வாடிவாசல் வெளியாகுமா என்ற ஏக்கம் சூர்யா ரசிகர்களுக்கு வர ஆரம்பித்துவிட்டது.
சூர்யாவுக்கு வில்லனாகும் வடசென்னை ஹீரோ
தற்போது இந்த கேள்வி எல்லாவற்றிற்கும் பதில் கிடைத்திருக்கிறது. வாடிவாசல் கண்டிப்பாக திரையில் வெளியாகும். அது மட்டுமில்லாமல் படத்தின் வில்லன் கேரக்டரில் இயக்குனர் அமீர் நடிக்கிறார். பருத்திவீரன் பஞ்சாயத்து கிளம்பிய போது இந்த தகவலும் சேர்ந்து வந்ததால் யாராலும் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சூர்யாவின் குடும்பத்தையே தவறாக பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில், அது எப்படி இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்வார்கள் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. தற்போது இந்த சந்தேகத்தை தீர்த்து வைத்திருக்கிறார் இயக்குனர் அமீர்.
வாடிவாசல் படத்தில் சூர்யாவுடன் அவர் இணைந்து நடிப்பதாகவும், படம் முழுக்க சூர்யாவுடன் பயணிக்கும் வில்லன் கேரக்டர் என்றும் அப்டேட் கொடுத்திருக்கிறார். மேலும் மௌனம் பேசியதே படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து சூர்யாவுடன் இணைவது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.
அமீர் தன் குடும்பத்தை பற்றி பேசி இருந்தாலும் அதைப் பற்றி சூர்யா எதுவுமே நினைக்காமல் தன்னுடைய படத்தில் வாய்ப்பு கொடுத்து இருப்பது அவருடைய பெரிய மனசை தான் காட்டுகிறது.