இளம் பெண் புகார், தேசிய விருது ரத்து, கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்! ஜானி மாஸ்டரை ரவுண்டு கட்டி அடிக்கும் பிரச்சனைகள்

அந்தரங்கப் புகாரில் சிக்கியுள்ள பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானிக்கு அறிக்கப்பட்டுள்ள தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக இப்பதிவில் பார்க்கலாம்.

குறுகிய காலத்தில் புகழ் வெளிச்சம்

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஆஸ்தான நடன இயக்குனராக இருப்பவர் ஜானி மாஸ்டர். இவர் விஜயின் அரபிக்குத்து, ரஞ்சிதமே, ரஜினி படத்தில் காவாலா, தனுஷின் மேகம் கருக்காதா உள்ளிட்ட பாடல்களுக்கு அட்டகாசமான நடனம் அமைத்திருந்தார். இது ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு, டிரெண்ட்டிங் ஆனது. அவர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து டான்ஸ் அமைத்துக் கொடுக்க புக்கிங் செய்யப்பட்டார்.

தனுஷ் பட பாடலுக்கு தேசிய விருது

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற மேகம் கருக்காத என்ற பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜானி மாஸ்டர் மீது 21 வயது இளம் பெண் நடனக் கலைஞர் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அதில், என் 16 வயதில் இருந்து என்னை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்ற ஜானி மாஸ்டர் தகாத முறையில் நடந்து கொண்டதாகப் புகார் அளித்திருந்தார்.

அப்பெண்ணின் புகார் அடிப்படையில் ஜானி மாஸ்டர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்விவகாரம் மீடியாவில் வெளியானதும் ஜானி தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், பெங்களூரில் பதுங்கியிருந்த அவரை கடந்த மாதம் கைது சிறையில் அடைத்தனர். இளம் பெண் புகார் குறித்து அவரிடம் விசாரித்த போது, அதை அவர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.

ரெட்கார்டு, கட்சியில் இருந்து நீக்கம்

ஜானி மாஸ்டர் விவகாரம் தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில், தெலுங்கு சினிமாவில் ஜானி மாஸ்டருக்கு ரெட்கார்டு கொடுக்கப்பட்டது. அதேபோல், ஆந்திர மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.தமிழ் சினிமாவிலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

தேசிய விருது ரத்து

இந்த நிலையில் வரும் 8 ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் தேசிய விருது வழங்கும் விழா நடைபெற விருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு தேசிய விருது பெறுவதற்காக நீதிமன்றத்தில் ஜானி ஜாமின் கோரி மனு அளித்திருந்த நிலையில், அவருக்கு அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நிபந்தனை ஜாமீன் வழங்கிவுள்ளது. இந்த நிலையில், ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீர்ப்புக்கு பின் என்னாகும்?

குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குனராக அறிமுகமாகி, ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஜானி மாஸ்டருக்கு இனிமேல் சறுக்கல்தான், இளம் பெண் புகாரில் சிக்கி சிறையில் உள்ள அவருக்கு தீர்ப்பு வெளியான பின் அவரது கேரியரும் ஆட்டம் காணும் என்று சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

- Advertisement -spot_img

Trending News