சனிக்கிழமை, அக்டோபர் 26, 2024

நீ பொட்டு வைச்ச தங்கக் குடம்.. தவெக மாநாட்டுக்கு இடம் தந்தவருக்கு விஜய் கொடுத்த பரிசு



தவெக முதல் மாநாடு நடத்த இடம் கொடுத்தவருக்கு விவசாயியின் வாழ்வாதாரத் தேவையை அறிந்து விஜய் உதவி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

அரசியல் வானில் ஒரு புதிய விடிவெள்ளி

தமிழக அரசியல் வானில் ஒரு புதிய விடிவெள்ளி தோன்றாதா என மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏன் இருக்கின்ற கட்சிகளும் ஏற்கனவே புதிதாக உதயமானவைதானே எனக் கேள்வி எழுப்பினாலும், இது மக்களின் எதிர்பார்ப்பு என்பதை மறுக்க முடியாது.

எல்லோரும் மாற்றத்தை விரும்புவது போல் இந்த அரசியலில் குதித்து சொந்தக் கட்சி தொடங்கி தேர்தலில் ஜெயித்து மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகிற எல்லா தலைவர்களுக்குமே அந்த மாற்றத்தை உருவாக்கவே வருகிறார்கள். அதன்படிதான் விஜயும் சினிமாவில் இருந்து விலகி, அரசியலுக்கு வருகிறார்.

திராவிட கட்சிகள் இதுவரை எந்தப் புதிய கட்சிகளுக்கும் பயப்படாத நிலையில் தவெக எனும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைப் பார்த்து திமுகவும், அதிமுகவும் பயப்படவில்லை என்றாலும் விஜயின் ரசிகர்கள் பட்டாளம், பொறுமை, எதையும் எதிர்கொள்ளும் பக்குவம், புதிய கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக உருவெடுத்திருப்பது இவையெல்லாம் ஆச்சரியப்பட வைத்திருக்கும்.

இதன் அடுத்தகட்டமாக கட்சியைத் தொடங்கி லெட்டர் பேட் கட்சியாக மட்டுமே இருந்து ஓட்டுக்காகவும், சீட் கிடைக்க வேண்டியும் தேர்தலுக்காக மட்டும் கட்சியின் பெயரைப் பிரயோகப்படுத்தாமல், எடுத்தோம் கவிழ்த்தோம் என்றிருக்காமல், வரும் தேர்தலில் கோட்டைக்குள் புந்து ஆட்சி நடத்த திட்டமிருக்கிறார். அவருக்கான காலம் குறைவு, செயல் பெரிது! இருப்பினு மற்ற நடிகர்களிடம் இருந்து விலகித் துணிந்து அரசியலில் குதித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு

இந்த நிலையில் தமிழகமே எதிர்பார்த்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பல்வேறு தடைகளைத் தாண்டி நாளை விக்கிரவாண்டியிலுள்ள வி.சாலையில் பிரமாண்டமாக நடக்கவுள்ளது. இதற்கான முறையான அனுமதி, மக்கள் வருகைக்கைக்கான பாதுகாப்பு ஏற்பாடு, திடலில் குடிநீர், கழிவறை, போக்குவரத்து வசதி, சிசிடிவி கேமராக்கள் இதெல்லாம் தயாராக உள்ளனர். தொண்டர்களுக்கும் எச்சரிக்கையும், அறிவுறுத்தலும் விஜய் தரப்பில் இருந்து விடுக்கப்பட்டது.

வருமானமின்றித் தவித்த விவசாயிக்கு உதவிய விஜய்

இந்த நிலையில் நாளை நடக்கவுள்ள தவெகவின் முதல் மாநாட்டிற்கு இடம் கொடுத்த வி.சாலை கிராம மக்களுக்கு விஜய் தரப்பில் இருந்து ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதேபோல் வருமானம் இன்றிக் கஷ்டப்பட்டு வந்த ராதாகிருஷ்ணன் என்ற விவசாயிக்கு ஒரு பசுவும் கன்றும் பரிசாக விஜய் வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகிறது. இவர் இம்மாநாட்டிற்காக தனது 2 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு அளித்துள்ளதாகவும், அவருக்கு அருகில் இருக்கும் நிலத்தைச் சேர்ந்தவருக்கு 2 ஏக்கர் வாடகைக்குக் கொடுத்ததற்கான பணம் இன்னும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

தலைமைச்செயலகம் போல் முகப்பு தோற்றம் அமைக்கப்பட்டுள்ள தவெக மாநாட்டில் இதுவரை எந்த அரசியல் கட்சியும் செய்யாத வகையில் பல பிரமாண்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு, அந்த இடத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கொடிக்கம்பத்தில் தவெகவின் கொடி பறக்கவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இம்மாநாடு நடைபெற இடம் கொடுத்த விவசாயிக்கு, வாடகைப் பணமும் வழங்கி அவரது வாழ்வாதாரத் தேவையையும் நிறைவேற்றிய விஜய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

- Advertisement -spot_img

Trending News