எம்ஜிஆருக்கு நிகராக சம்பளம் வாங்கிய வில்லன்.. சிரிப்பாலேயே மிரளவிட்ட மாபெரும் கலைஞன்

இன்றைய சினிமாவில் ஒரு படத்தில் வில்லனை வித்தியாசமாக காட்ட வேண்டும் என்று புதிதாக நிறைய விஷயங்கள் செய்கிறார்கள். ஆனால் 70களில் சினிமாவில் வில்லன் கேரக்டர் என்றால் அது இவர்கள் தான் என தனியாக நடிகர்களை வைத்திருந்தார்கள். மேலும் வில்லனாக நடிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக கத்தி சண்டை, கம்பு சண்டை போட வேண்டும். மேலும் பக்கம் பக்கமாக வசனங்களும் பேச வேண்டும்.

மக்கள் திலகம் எம்ஜிஆரின் படங்களில் எல்லாம் வில்லனாக நடிப்பவர்கள் ரொம்பவே பாவம் என்று தான் சொல்ல வேண்டும். திரையரங்குகள் முழுக்க அந்த வில்லனை திட்டாத ஆட்களே இருக்க மாட்டார்கள். அதிலும் எம்ஜிஆர் வில்லனிடம் அடி வாங்கி விட்டார் என்றால் நிறைய இடங்களில் தியேட்டர் ஸ்கிரீன் கூட கிழிக்கப்பட்டு விடும். அந்த அளவுக்கு எம்ஜிஆர் ரசிகர்கள் இருந்தார்கள்.

எம் என் நம்பியார், அசோகன் போன்றவர்கள் எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் தங்களுடைய வித்தியாசமான வில்லத்தனத்தை காண்பிப்பார்கள். இதில் ஒரு வில்லன் தன்னுடைய சிரிப்பை வைத்து மட்டுமே மக்களை மிரள விட்டிருக்கிறார். மேலும் அந்த காலத்திலேயே மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு நிகராக இவர் சம்பளமும் வாங்கி இருக்கிறார். இவர் பேசிய நிறைய வசனங்கள் இன்றைய தலைமுறை வரை பிரபலமாக இருக்கின்றன.

எம்ஜிஆர் உடன் பல படங்களில் வில்லனாக நடித்த பி எஸ் வீரப்பா தான் அந்த வில்லன் நடிகர். மக்கள் திலகத்திற்கும், வீரப்பாவிற்க்கும் பெரிதாக எல்லாம் சம்பள வித்தியாசம் கிடையாதாம். இவர்கள் இருவருக்குமே கிட்டத்தட்ட ஐந்திலிருந்து, பத்தாயிரம் வரை வித்தியாசத்தில் தான் சம்பளம் கொடுத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு புகழோடு இருந்திருக்கிறார் வீரப்பா.

ஒரு நாடகக் கலைஞனாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய பிஎஸ் வீரப்பாவை சினிமாவுக்குள் கொண்டு வந்தது கேபி சுந்தராம்பாள் தான். கண்களை உருட்டிக்கொண்டு இவர் சிரிக்கும் தோரணையே பயங்கர வில்லத்தனமாக இருக்கும். இவர் பேசும் தமிழுக்காகவே அப்போது ரசிகர்கள் இவருடைய படத்தை பார்த்திருக்கிறார்கள்.

இவர் பேசிய வசனங்களில் “மணந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி”, வஞ்சிக்கோட்டை வாலிபனில் வரும் “சபாஷ் சரியான போட்டி”, நாடோடி மன்னன் படத்தில் வரும் “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்” போன்ற வசனங்கள் இன்று வரை பிரபலமாக இருக்கின்றன. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இவருடைய சிரிப்பு ரொம்பவும் பிடிக்குமாம். இன்றும் இவருடைய சிரிப்பை பலரும் மிமிக்ரி செய்து வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →