நண்பனின் இழப்பை ஏற்க முடியாத ரஜினி.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சரத்பாபு

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சரத்பாபு. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய சிறந்த நடிப்பை சரத்பாபு வெளிப்படுத்துவார். ரஜினியின் அண்ணாமலை, முத்து, பாபா போன்ற படங்களில் சரத் பாபு நடித்திருக்கிறார்.

அண்ணாமலை படத்தில் ரஜினியின் நண்பனாக அசோக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். தற்போது சரத் பாபுவுக்கு 71 வயதாகிறது. இவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்சனை பாதிக்கப்பட்டதால் அதற்கான சிகிச்சை ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெற்று வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ரஜினியின் நண்பர் மனோபாலா இறப்பு செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அவர் உயிரிழந்த நிலையில் அன்று இரவு சரத்பாபுவும் இறந்து விட்டதாக இணையத்தில் செய்தி பரவியது. ஒரே நாளில் இவ்வளவு பெரிய இழப்பா என ரசிகர்கள் கலக்கத்தில் இருந்தனர்.

ஆனால் சரத்பாபுவின் சகோதரி அவர் நலமாக இருப்பதாகவும் சிகிச்சை பெற்று வருவதாக கூறியிருந்தார். இதனால் சரத் பாபு மீண்டும் நலமுடன் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இன்று அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. சரத்பாபுவிற்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று மதியம் 1:30 மணிக்கு இந்த மண்ணுலகை விட்டு பிரிந்துள்ளார்.

இந்த செய்தியும் வதந்தியாக இருக்கக் கூடாதா என ரசிகர்கள் எதிர்பார்த்தாலும், நம்மை விட்டு சரத்பாபு பிரிந்தார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை தான். மேலும் சரத்பாபுவின் இறப்பிற்கு திரையுலகினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →