தளபதி விஜய் இன்றைய தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸின் கிங் மேக்கராக இருக்கிறார். சமீப காலமாக கோலிவுட் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூட இவரை புகழ்ந்து தள்ளுகின்றனர். கடந்த சில வருடங்களாக இவருடைய படங்களின் கலெக்சன்கள் 100 கோடிக்கு குறையாமல் இருக்கிறது. இவரை நம்பி எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் காத்து கிடக்கின்றனர்.
ஆனால் இப்போதிருக்கும் தளபதியை ஒப்பிடும் போது, சினிமாவுக்கு வந்த புதிதில் அவர் இருந்த நிலைமையே வேறு. என்னதான் வெற்றி இயக்குனரின் மகனாக இருந்தாலும் சினிமாவுக்குள் நுழையும் போது இவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் அள்ளி தெளிக்கப்பட்டன. மேலும் முதலில் இவருடைய தோற்றத்தை பார்த்து அவருடைய அப்பா எஸ்.ஏ. சந்திரசேகருக்கே விஜய்யை ஹீரோவாக்க விருப்பம் இல்லையாம்.
இருந்தாலும் தங்களுடைய ஒரே மகனின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக விஜய்யுடைய அப்பா சந்திரசேகராக இருக்கட்டும், அம்மா சோபா சந்திரசேகராக இருக்கட்டும் மகனின் வெற்றிக்காக முழுமூச்சுடன் இறங்கினர். நடிகை மற்றும் பாடகியாக இருந்த சோபா சந்திரசேகர் கதை, இயக்குனர் என மகனுக்காக பரிமாணம் எடுத்தார்.
ஆனால் விஜய்க்கு அமைந்த படங்கள் எல்லாம் கொஞ்சம் கூட சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. படங்களில் அதிகமாக கவர்ச்சி காட்சிகள் இடம் பெற்றன. குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கும் காட்சிகளாக அவை இல்லை. பொதுவாக சொல்லப்போனால் இப்போதிருக்கும் கௌதம் கார்த்திக், ஜி வி பிரகாஷ் போன்று தான் விஜய்யும் நடித்து கொண்டிருந்தார்.
நிறைய பத்திரிகைகள் விஜய் படத்தை பற்றி விமர்சனங்கள் எழுதும் போது ஹீரோயின்களின் கவர்ச்சியை நம்பியே விஜய் இருக்கிறார் என்றே எழுத ஆரம்பித்து விட்டனர். விஜய் மொத்தமாக தன் பெயரை கெடுத்து கொண்டிருந்தார் என்றே சொல்லலாம். ஆனால் சரியான நேரத்தில் விஜய்யை கை கொடுத்து மேலே தூக்கிவிட்டவர் தான் இயக்குனர் விக்ரமன்.
விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக திரைப்படத்தில் நடித்த பிறகு தான் விஜய்யின் இமேஜ் மாறியது. இந்த படத்திற்கு பிறகு தான் விஜய்க்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகமானது. அதன் பின்னர் சினிமா ரசிகர்களின் பல்சை புரிந்து கொண்ட தளபதி விஜய் நல்ல கதைகளை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். பூவே உனக்காக ஏற்படுத்திய திருப்புமுனை தான் இன்று தமிழ் சினிமாவிற்கு தளபதியை கொடுத்திருக்கிறது.