சனிக்கிழமை, அக்டோபர் 26, 2024

நாளை நடக்கவிருக்கும் தவெக மாநாடு.. முக்கிய கோரிக்கையுடன் வெளியான தளபதியின் அறிக்கை

Thalapathy Vijay: நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு நாளை நடைபெற இருக்கிறது. ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும், தமிழ்நாட்டு மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாள் இதுதான்.

அது மட்டும் இல்லாமல் அரசியல்வாதியாக முதன் முதலில் விஜய் மேடை ஏற இருக்கும் நிகழ்வை தமிழக அரசியலில் முக்கிய புள்ளிகள் கூட பெரிய அளவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். மாநாடு நெருங்கும் வேளையில் நடிகர் விஜய் தொடர்ந்து தொண்டர்களுக்கு நிறைய அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

முக்கிய கோரிக்கையுடன் வெளியான தளபதியின் அறிக்கை

அந்த வகையில் இன்றும் விஜய் தன்னுடைய கட்சித் தொண்டர்களுக்கு முக்கிய வேண்டுகோளை விடுத்திருக்கிறார். அந்த அறிக்கையில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். பெயரைப் போல சில விஷயங்களை திரும்பத் திரும்ப சொல்லியே ஆக வேண்டும்.

அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப் போகிறேன். காரணம் எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்பும் முக்கியம். ஆகவே மாநாட்டு பயண பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும்.

இரு சக்கர வாகன பயணத்தை தவிர்த்தல் வேண்டும். உங்கள் பாதுகாப்பு கருதியே இதைச் சொல்கிறேன். அதேபோல வருகிற வழிகளில் பொது மக்களுக்கு, போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்காமல் இருக்க வேண்டும்.

பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுபவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். உங்களின் பாதுகாப்பை மனதில் நினைத்துக் கொண்டே தான் நான் மாநாட்டுக்கு வருவேன். அதை மனதில் நிலை நிறுத்திக் கொண்டு நீங்களும் வாருங்கள்.

நாளை நமது மாநாட்டில் சந்திப்போம், மாபெரும் அரசியல் சாதனையை நிகழ்த்திக் காட்டுவோம் என விஜய் அந்த அறிக்கையில் சொல்லி இருக்கிறார். மாநாட்டின் போது எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதில் விஜய் ரொம்பவும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -spot_img

Trending News