யானை இல்லை குதிரை என சூப்பர் ஸ்டார் நிரூபித்த படம்.. தொடர் தோல்விகளுக்கு பின் ரஜினியை தூக்கி நிறுத்திய இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக அந்த பட்டத்தை தன்னுடைய வசம் தக்க வைத்து கொண்டிருக்கிறார். கறுப்பு, வெள்ளை காலத்தில் இருந்து ஆரம்பித்த இவருடைய சினிமா வாழ்க்கை இன்றைய நவீன சினிமா வரை உச்சத்தில் மட்டுமே இருக்கிறது. யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் ரஜினிக்கும் அவ்வப்போது சினிமா வாழ்க்கை சறுக்கியதுண்டு.

ரஜினிக்கும் அவ்வப்போது அவருடைய படங்கள் தோல்வியை சந்தித்து, வணிக ரீதியாக பெரும் நஷ்டத்தை அடைந்ததுண்டு. ஆனால் கடந்த 2003 ஆம் ஆண்டு ரஜினியின் சினிமா கேரியரே கேள்விக்குறியாகும் படி அவருக்கு ஒரு மிகப்பெரிய அடி விழுந்தது. அவர் நடிப்பில் வெளியான பாபா திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததோடு, பொருளாதார சிக்கலும் ஏற்பட்டது.

பிளாப் படம், பொருளாதார சிக்கல், அரசியல் உள்நோக்கம் என ரஜினிக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. இதனால் சினிமாவில் அவருடைய அடுத்தகட்ட நகர்வும் சந்தேகத்திற்குள்ளானது. இனி ரஜினி அவ்வளவு தான், சினிமாவில் நடிக்க மாட்டார் என தகவல்கள் வெளியாக ஆரம்பித்தது. மேலும் தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதங்கள் கூட நடைபெற்றது.

இரண்டு வருடங்கள் சினிமாவை விட்டு ரஜினியும் முழுவதுமாக ஒதுங்கியது போலவே அனைவரும் நினைத்தனர். ஆனால் ரஜினி அடுத்து ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தோடு களத்தில் குதித்தார். இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்தார். மலையாள படமான மணிசித்திரதாழ் திரைப்படத்தை ரஜினிக்கு ஏற்றார் போல் கொஞ்சம் மாற்றி வாசு எடுத்த படம் சூப்பர், டூப்பர் ஹிட் ஆனது.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது கூட ரஜினி, கீழே விழுந்ததும் எழாமல் இருக்க நான் யானை இல்லை, குதிரை என்று சொன்னார். சொன்னதை போலவே சாதித்தும் காட்டினார். ஒரு வருடத்திற்கும் மேல் இந்த படம் திரையரங்கில் ஓடியது. ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு அசந்து போய் நின்றது.

வாசு ஏற்கனவே, ரஜினிகாந்தை வைத்து உழைப்பாளி மற்றும் மன்னன் திரைப்படத்தி இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். கேள்விக்குறியாகி போன ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையை மொத்தமாக புரட்டி போட்டது வாசுவின் சந்திரமுகி திரைப்படம் தான். அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் என்னும் குதிரை 15 வருடங்களுக்கும் மேலாக நிற்காமல் ஓடிக்கொண்டு இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →