பாக்யராஜ் படங்களை தாங்கி பிடித்த 4 நடிகர்கள்

70களில் இருந்து  தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத்திறமை கொண்ட கே. பாக்யராஜ், பல இளம் நடிகர்களை வளர்த்து விட்டிருக்கிறார். அதேசமயம் இவருடைய படங்களின் வெற்றிக்கு காரணமாக இருந்த 4 நடிகர்களை பற்றி பார்ப்போம்.

கல்லாப்பட்டி சிங்காரம்: பாக்யராஜ் இயக்கும் ஒவ்வொரு படத்திற்கும் கல்லாப்பெட்டி  சிங்காரத்திற்கென்று ஒரு கதாபாத்திரத்தை அவர் தனியாக ஒதுக்கி வைத்து விடுவார். அந்த அளவிற்கு பாக்யராஜ் இவருக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். மேலும் பாக்யராஜின் படங்கள் ஆன மோட்டார் சுந்தரம் பிள்ளை, சுவரில்லா சித்திரம், டார்லிங் டார்லிங் டார்லிங்,  எங்க ஊரு பாட்டுக்காரன், பூவிலங்கு, இன்று போய் நாளை வா, கதாநாயகன் போன்ற நூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில்  சிங்காரம் நடித்திருக்கிறார்.

இவர் சொந்தமாக நாடகக் குழு ஒன்றையும் வைத்து பல நாடகங்களை மேடை ஏற்றியவர். அதிலும் ஒரு கை ஓசை படத்தில் டீக்கடைக்காரராக நடித்திருப்பார். இதில் பாக்கியராஜ் வாய் பேச முடியாத கேரக்டரில் சிங்காரத்துடன் அடித்த லூட்டி கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு டின்னை வைத்து இவர்கள் செய்திருக்கும் காமெடி படத்தை பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும்.

கே கே சௌந்தர்: 1950 முதல் 1990 வரை பல தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து கலக்கியவர் தான் கே கே சௌந்தர். அதிலும் பாக்யராஜின் படங்கள் ஆன புதிய வார்ப்புகள், ஒரு கை ஓசை, முந்தானை முடிச்சு, சின்ன வீடு போன்ற படங்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். அதிலும் விஜயகுமாருக்கு முன் தமிழ் சினிமாவில் நாட்டாமை கெட்டப்பிற்கு மிக கச்சிதமாக பொருந்தியவர் கே கே சௌந்தர் தான்.  இவர் பெரும்பாலான படங்களில்  கையில் சொம்பு, வெத்தலை பாக்கு பெட்டியுடன் தீர்ப்பிடும் நாட்டாமையாகவே கன கச்சிதமாக பொருந்தி நடித்திருப்பார்

செம்புலி ஜெகன்: பாக்யராஜின் சூப்பர் ஹிட் படங்களில் ராசுகுட்டி முக்கிய இடத்தை பிடிக்கும். இதில் கதாநாயகன் ஆன பாக்கியராஜுக்கு குடை பிடித்தவாறு சுற்றித்திரிந்த நடிகர் தான் இயக்குனர் செம்புலி ஜெகன். இவருடைய செம்புலி என்ற கதாபாத்திரத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்திட முடியாது. இந்தக் கதாபாத்திரத்தின் மூலம்தான் இவருக்கென்று ஒரு தனி இடத்தை மக்கள் மனதில் பிடித்தார்.

இவர் ஆரம்ப காலத்தில் பல இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைந்து திரிந்தார். அப்போது அவருடைய நடிப்பு திறமையை பார்த்து பாக்யராஜ் தன்னுடைய ஆராரோ ஆரிரரோ  என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். மேலும் ராசுகுட்டியாக  அந்தப் படத்தில் பாக்யராஜ் கெத்து காட்டுவதற்கு ஜெகன் தான் பக்க பலமாக இருந்திருப்பார்.  இந்த படம் மட்டுமல்ல துணை முதல்வர் என்ற படத்திலும்  செம்புலி ஜெகன் பெரிய பாண்டியாக நடித்த பாக்கியராஜ் உடன் இணைந்து நடித்திருப்பார்.

இடிச்சப்புளி செல்வராஜ்: எம்ஜிஆர், சிவாஜி கணேசன், கமல், ரஜினி போன்றவருடன் இணைந்து நடித்த இவர், பாக்யராஜின் படங்களிலும் அவருக்கு பக்க பலமாக தோன்றி ஹிட் கொடுத்தார். பாக்யராஜ் மற்றும் செல்வராஜ் இருவரின் காமெடி பக்காவாக ஒர்க் அவுட் ஆகி இருக்கும். அதிலும் இது நம்ம ஆளு.  எங்க சின்ன ராசா உள்ளிட்ட படங்களில் செல்வராஜ் பாக்கியராஜுடன் அடித்த லூட்டி கொஞ்சம் நஞ்சமல்ல.  

இவ்வாறு இந்த நான்கு நடிகர்கள் தான் தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களாக இருந்து பாக்யராஜின் படங்களை தாங்கி பிடித்து வெற்றிப் பாதைக்கு கொண்டு சேர்த்தனர். அதிலும் ராசுகுட்டி ஆக  பாக்யராஜை ஜெயிக்க வைத்த பெருமை  செம்புலி ஜெகனுக்கேசேரும். 

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →