கொடூர வில்லனாக இருந்து நகைச்சுவை நடிகர்களாக மாறிய 5 பிரபலங்கள்..

5 Villains Became Comedians: சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருக்கும் நடிகர்கள் தங்களை வெவ்வேறு பரிமாணத்திற்கு உட்படுத்துகின்றனர். முன்பு வில்லனாக நடித்து மிரட்டியவர்கள் இப்போது அதற்கு எதிர் மாறாக காமெடி கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து ஆச்சரியப்படுத்துகின்றனர். அதிலும் ரசிகர்களை பயங்கரமாக பயமுறுத்திய 5 வில்லன்கள் இப்போது காமெடி நடிகர்களாக திடீரென்று அவதாரம் எடுத்திருக்கின்றனர். அவர்கள் யார் யார் என்பதை இப்போது பார்ப்போம்.

மன்சூர் அலிகான்: இவர் 90களில் மிகவும் முரட்டுத்தனமான வில்லனாக நடித்து ரசிகர்களை அலறவிட்டவர். அதிலும் கேப்டன் பிரபாகரன் படத்தில்கேப்டனையே மிரட்டும் வில்லனாக நடித்து அசத்தினார். அந்த படத்திற்குப் பிறகு இவர் பெரும்பாலான படங்களில் வில்லனாகவே தொடர்ந்து நடித்தார். அதன் பின்பு சமீப காலமாக இவர் காமெடி கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது விஜய்யின் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனந்த் ராஜ்: 90களில் டாப் நடிகர்களின் படங்களில் வில்லனாக மிரட்டி கொண்டு இருந்த ஆனந்த் ராஜ், இப்போது காமெடியனாக அவதாரம் எடுத்திருக்கிறார். அதிலும் பாட்ஷா படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு தண்ணி காட்டிய இந்திரனா என ஆச்சரியப்படும் அளவுக்கு இப்போது காமெடி கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் அந்த அளவிற்கு மிகக் கொடூரமாகவே நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் சரத்குமாரின் சிம்மராசி, சூரியவம்சம், பாட்டாளி போன்ற படங்களில் இவரது வில்லத்தனம் பார்ப்பதற்கு கொடூரமாக இருக்கும்.

அப்படிப்பட்டவர் சமீப காலமாக காமெடியனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் நானும் ரவுடிதான், ஜாக்பாட், சிலுக்குவார் பட்டி சிங்கம், மரகத நாணயம் போன்ற படங்களில் வில்லனாகவே இருந்தாலும் அதில் நகைச்சுவை கலந்த நடிப்பை வெளிக்காட்டினார். இவருடைய நகைச்சுவை கலந்த வில்லத்தனத்தை ரசிகர்களும் விரும்புவதால் அதே மாதிரியான கேரக்டர்களை தற்போது தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

மொட்டை ராஜேந்திரன்: இவருடைய கரடு முரடான குரல் தான் இவரை தனித்துவமாக அடையாளப்படுத்துகிறது. இவருடைய கெட்டப்பிற்கும் குரலுக்கும் ஏற்ப பிச்சைக்காரர்களை சித்திரவதை செய்யும் ஒரு கொடூர தலைவராக ‘நான் கடவுள்’ படத்தில் நடித்து ரசிகர்களை மிரட்டி இருப்பார். அதன் பிறகு ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படத்தில் வில்லத்தனமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த பிறகு தொடர்ந்து இவரை நகைச்சுவை நடிகராகவே மாற்றிவிட்டனர்.

அதிலும் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் மதுமிதாவுடன் இணைந்து அடித்த லூட்டி பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பது. தொடக்கத்தில் வில்லனாக மிரட்டிய மொட்டை ராஜேந்திரன் இப்போது பெரும்பாலும் காமெடி கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

பசுபதி: என்ன ரோல் கொடுத்தாலும் அதை அசால்டாக நடிப்பவர்தான் பசுபதி. இவர் தொடக்கத்தில் பெரும்பாலான படங்களில் வில்லனாகவே நடித்திருக்கிறார். அதிலும் விருமாண்டி படத்தில் கமலுக்கு டஃப் கொடுக்கும் கொத்தள தேவர் என்ற கேரக்டரில் மிரட்டினார். அதுமட்டுமல்ல தூள் படத்தில் விக்ரமிற்கு வில்லனாகவும், திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு வில்லனாக பட்டாசு பாலு என்ற கேரக்டரிலும் கொடூரமான நடித்து அலற விட்டார்.

ஆனால் அதன் பிறகு அதே பசுபதி குணச்சித்திர நடிகராக ஈ, வெடிகுண்டு முருகேசன், வெயில், சார்பட்டா பரம்பரை போன்ற படத்தில் தோன்றி அசத்தினார். இவர் 90களில் டாப் நடிகர்களின் படங்களில் பெரும்பாலும் வில்லனாக நடித்து மிரட்டியவர், இப்போது சாந்தமான கேரக்டர்களின் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறார்.

லிவிங்ஸ்டன்: 1988ல் பூந்தோட்ட காவல்காரன் என்ற படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, அதன் பிறகு தொடர்ந்து ஒரு சில படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களிலேயே மிரட்டிக் கொண்டிருந்தார். அதன் பின்பு சுந்தர புருஷன், சொல்லமலே, விரலுக்கேற்ற வீக்கம், என் புருஷன் குழந்தை மாதிரி, எங்களுக்கும் காலம் வரும் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து அசத்தினார்.

அதன் பின் 90களில் பிற்பகுதியில் இருந்து 2000 ஆண்டுகளின் முற்பகுதியில் குணச்சித்திர கேரக்டர்களிலும், நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்களிலும், கேமியோ ரோலிலும் லிவிங்ஸ்டன் நடிக்க தொடங்கினார். அதிலும் இவர் தில்லாலங்கடி, காவலன், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, மகளிர் மட்டும் போன்ற நகைச்சுவை படங்களிலும் நடித்துக் கலக்கியவர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →